இங்கிலாந்தின் போல்டன் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய லில்லியா என்ற சிறுமி காணாமல்போய் ஒரு வாரத்துக்கும் மேலாகியுள்ள நிலையில், அவரைக் கண்டறியும் தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.
இம்மாதம் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்து வெளியேறிய குறித்த சிறுமி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தொடர்ச்சியான தீவிர சிசிடிவி பதிவுகளின் ஆய்வுக்குப் பின்னர், இம்மாதம் 14ஆம் திகதி காலை 10.36 மணியளவில் சிறுமி மான்செஸ்டர் பிக்காடில்லி பஸ் நிலையத்தில் நின்றிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சால்போர்ட் பகுதியிலிருந்து மான்செஸ்டர் நோக்கிப் பயணித்த 36ஆம் இலக்கப் பஸ்ஸில் ஏறிய சிறுமி, பிக்காடில்லி பஸ் நிலையத்தில் வந்து இறங்கியது தொடர்பான காட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
வெளியிடப்பட்டுள்ள புதிய சிசிடிவி பதிவுகளில், சிறுமி கறுப்பு நிற மேலாடை மற்றும் ஹூடி அணிந்தவாறு முதுகுப்பையுடன் காணப்படுகிறார். குறித்த பஸ்ஸில் இருந்து இறங்கிய பின்னர் அவர் எங்கு சென்றார் என்பது தொடர்பிலோ அல்லது அவரது நடமாட்டம் குறித்த ஏதேனும் தகவல்கள் தெரியவந்தாலோ, உடனடியாகத் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.