நாட்டின் இரு வேறு பகுதிகளில் சனிக்கிழமை (19) நீர்நிலைகளில் மூழ்கி 15 வயதுடைய சிறுவர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை – வெலிகமை பகுதியில் ஆற்றிலும், பயாகல கடற்பகுதியில் நீராடச் சென்றபோதும் இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
வெலிகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பொக்க, நுகதுவ பாலத்திற்கு அருகில் உள்ள பொல்அத்துமோதர ஆற்றின் கிளையாற்றில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று சிறுவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வெலிகம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காணாமற்போன சிறுவன் வெலிகமை, தெனிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பயாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடா பயாகல பகுதியில் உள்ள கடற்கரையில் நீராடச் சென்ற சிறுவர்களில் ஒருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார். இச்சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது.
காணாமல்போன சிறுவன் குடா பயாகல பகுதியைச் சேர்ந்த 15 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் தனது நண்பர்களுடன் நீராடச் சென்றபோதே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல்போன சிறுவனைத் தேடும் பணிகளில் ஈடுபட்டு வரும் அதேவேளை, வெலிகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.