செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் மூளை நன்கு சிறப்பாக இயங்குவதற்கு முத்திரைகள்

மூளை நன்கு சிறப்பாக இயங்குவதற்கு முத்திரைகள்

4 minutes read

முத்திரைகள் செய்யும் பொழுது ஐந்தாவது உடலில் உள்ள ஆன்ம உடலில் இருந்து சக்தி பெற்று மற்ற நான்கு உடல்களில் உள்ள குறைகளை நீக்குகின்றது. மற்ற உடல்களுக்கு சக்தி கிடைக்கின்றது.

யோகத்தின் தந்தை எனப்படுபவர் பதஞ்சலி மகரிஷியாவார். இவரது யோகம் அஷ்டாங்க யோகம் எனப்படும். எட்டு படிகளாக யோகத்தை அமைத்துள்ளார்.

அஷ்டாங்க யோகம்

இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. நாம் ஒவ்வொருவரும் நமது உடலையும், மனதையும், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பதஞ்சலி மகரிஷியின் அஷ்டாங்க யோகம் ஒன்று தான் சிறந்த வழியாகும்.

இதில் இன்றைய மனிதர்களுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் சிறப்பாக இயங்கச் செய்யும் யோகக்கலைகளை எளிமையாக விளக்கமாகப் பார்க்கப் போகிறோம், ஒவ்வொரு உறுப்புகளும் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால் என்ன மாதிரி பிரச்சினைகள் வரும், அதற்குறிய யோகா சிகிச்சைகளை தெளிவாக காண உள்ளோம்.

முத்திரைகள்: இந்த உடல் பஞ்சபூதங்களால் ஆனது. ஒவ்வொரு செல்களிலும் பஞ்சபூதத் தன்மைகள் உள்ளது. இதனுடைய ஒட்டுமொத்த கட்டுப்பாடு நமது விரல் நுனியில் உள்ளது. நாம் வெறும் விரல்கள் என்று தான் எண்ணுகிறோம். இந்த விரல் நுனி மகிமையை உணர்ந்தால் வாழ்வில் உடல், மன ஆரோக்கியம் முழுமையாக கைகூடும்.

நமது உடம்பில் உள்ள விரல் நுனிகளும் அதன் தொடர்புடைய உள் உறுப்புக்களும் பற்றி தெரிந்து கொள்வோம்.
பெருவிரல் நுனி – நெருப்பு
இது இதயத்தையும், சிறுகுடலையும், இதய மேலுறையையும், மூவெப்ப மண்டலத்தையும் கட்டுப்படுத்துகின்றது.
சுண்டுவிரல் நுனி – நீர்
சிறுநீரகத்தையும், சிறுநீர்ப்பையையும் கட்டுப்படுத்துகின்றது.
மோதிரவிரல் நுனி – நிலம்
மண்ணீரலையும், இரைப்பையையும் கட்டுப்படுத்துகின்றது.
நடுவிரல் நுனி – ஆகாயம்
கல்லீரலையும், பித்தப்பையையும் கட்டுப் படுத்துகின்றது.
ஆள்காட்டிவிரல் நுனி – காற்று
நுரையீரலையும், பெருங்குடலையும் கட்டுப் படுத்துகின்றது.

மேற்குறிப்பிட்ட உறுப்புக்கள் ராஜ உறுப்புக்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ராஜ உறுப்புகளின் சக்தி நமது கைவிரல் நுனிகளில் உள்ளது. முத்திரை என்பது ஒவ்வொரு கைவிரல் நுனிகளில் ஒரு அழுத்தம் கொடுப்பது. இதன் மூலம் அதைச் சார்ந்த ராஜ உறுப்புக்கள் நன்கு சக்தி பெற்று சிறப்பாக இயங்க வழிவகை செய்கின்றது. ராஜ உறுப்புகளுக்கு நல்ல பிராண சக்தி கிடைக்கின்றது. உடலுக்கு மட்டுமல்ல எண்ணங்களையும் சரி செய்கின்றது. மன அழுத்தத்தை நீக்குகின்றது. மன அமைதியைத் தருகின்றது.

முத்திரையின் மகிமையும் மனித உடல் அடுக்கும் மனித உடலில் ஐந்து வகையான அடுக்குகள் உள்ளது:

முதல் உடல் – அன்னமயகோசம்- – உணவினால் ஆன உடல்
இரண்டாவது உடல் – – பிராணமயகோசம் -மூச்சு உடல்
மூன்றாவது உடல் – மனோமயகோசம் – எண்ணங் களினால் ஆனது
நான்காவது உடல் – விஞ்ஞானமயகோசம் -புத்தி பூர்வமானது.
ஐந்தாவது உடல் – ஆனந்தமயகோசம் – ஆன்ம உடல், ஒளியுடன், இயற்கை சக்தி

முத்திரைகள் செய்யும் பொழுது ஐந்தாவது உடலில் உள்ள ஆன்ம உடலில் இருந்து சக்தி பெற்று மற்ற நான்கு உடல்களில் உள்ள குறைகளை நீக்குகின்றது. மற்ற உடல்களுக்கு சக்தி கிடைக்கின்றது.

முத்திரைகள் யார் செய்யலாம்

சிறியவர் முதல் பெரியவர் வரை ஆண்/பெண் பாகுபாடின்றி அனைவரும் செய்யலாம். ஏழு வயதிலிருந்து பயிற்சி செய்யலாம். நேரம் காலை 4 முதல் 7 மணி வரை, மதியம் 12 முதல் 1 மணி, மாலை 5 மணி முதல் 7 மணி வரை சாப்பிடுமுன் ஒவ்வொரு முத்திரையும் 2 நிமிடம் முதல் 5 நிமிடங்கள் வரை பயிற்சி செய்தால் போதும். சாப்பிட்டிருந்தால் இரண்டு மணி நேரம் கழித்து பயிற்சி செய்யலாம். தண்ணீர், பால் குடித்தால் ஐந்து நிமிடங்கள் கழித்து பயிற்சி செய்யலாம்.

அமரும் நிலை:தரையில் விரிப்பு விரித்து சுகாசனத்தில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து பயிற்சி செய்யவும். காலை / மதியம் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் மேற்கு திசை நோக்கியும் பயிற்சி செய்யவும்.

உடை: தளர்வான உடை அணிந்து கொள்ளவும். ஆண்கள் பேண்ட், டி-சர்ட், பெண்கள் சுடிதார், சேலை உடுத்தி பயிற்சி செய்யவும்.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் நான்கு நாட்கள் பயிற்சி செய்ய வேண்டாம். 5 வது நாளில் இருந்து பயிற்சி செய்யவும். நாம் தேகம் சிறக்க யோகம் என்ற இந்த தொடரில் முதலில் உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொரு உறுப்புகளையும் நன்கு இயங்கச் செய்யும் முத்திரைகளை பல வித சிகிச்சையாக பார்க்க உள்ளோம். முதலில் உச்சி முதல் பாதம் வரை முத்திரைகள் மூலம் உடல் உள் உறுப்புகளை வலுப்படுத்தும் சிகிச்சை முறைகளை காண்போம்.

  1. மூளை நன்கு சிறப்பாக இயங்குவதற்கு முத்திரைகள்

மூளை செல்கள் நன்கு இயங்க வேண்டும். மூளையில் கட்டி வரக்கூடாது. மூளை காய்ச்சல் வரக்கூடாது. மூளையில் உள்ள நரம்பு மண்டலங்கள் நன்கு இயங்க வேண்டும். நமது எண்ணங்கள் நல்ல நேர்முகமான எண்ணங்களாக இருக்க வேண்டும்.

நமது எண்ணங்கள் தீய எண்ணங்களாக அதிகரித்து நமது சொல், செயல் பிறருக்கு தீங்கு விளைவித்தால் மனிதர்கள் கேட்கும் கேள்வி உனக்கு மூளை இல்லையா, எப்படி இவ்வாறு கீழ்த்தரமான செயல்களை செய்ய முடிகிறது என்று தான் கேட்பார்கள். மூளை இருக்கிறது. ஆனால் அங்கு சரியாக ரத்த ஓட்டம், பிராண ஓட்டம் சரியாக இல்லை. மூளை செல்கள் புத்துணர்வு பெறவில்லை. நாம் செய்கின்ற இந்த முத்திரை பயிற்சி மூளை செல்களுக்கு நல்ல ரத்த ஓட்டத்தை கொடுக்கின்றது. மூளையில் உள்ள நரம்பு மண்டலங்கள் பிராண ஆற்றல் பெற்று இயங்கும். எண்ணங்கள் தெளிவாகும். நல்ல எண்ணங்கள் மட்டும் மலரும். தீய எண்ணங்கள் வளராமல் தடுக்கும்.

சின் முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து சுகாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது பத்மாசனத்தில் அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.

கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சில் 20 வினாடிகள் கவனம் செலுத்தவும். மூச்சு உள்ளே வருவதையும் வெளியே செல்வதையும் கவனிக்கவும். பின் ஆள்காட்டி விரல், பெருவிரல் நுனியை சேர்க்கவும். மற்ற மூன்று விரல்கள் தரையை நோக்கியிருக்கவும். இருக்கைகளிலும் செய்யவும். விரல் நுனியில் லேசாக அழுத்தம் கொடுக்கவும்.

ஒரு மனம் விரல் நுனி அழுத்தத்தை கவனிக்கவும். மற்றொரு மனம் இயல்பாக நடக்கும் மூச்சில் கவனம் செலுத்தவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் வரை இருக்கவும். பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும்.

ஆழ்ந்த மூச்சு: மீண்டும் ஒரு முறை இருகைகளையும் சின் முத்திரையில் வைக்கவும். இரு மூக்கு துவாரம் வழியாக மிக மெதுவாக மூச்சை இழுக்கவும். உடன் மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். இதேபோல் பத்து முதல் இருபது முறைகள் செய்யவும்.

மூச்சை இழுக்கும் பொழுது வயிறு லேசாக வெளி வரவேண்டும். மூச்சை வெளிவிடும்பொழுது வயிறு லேசாக உள்ளே செல்ல வேண்டும். உங்கள் உணர்வை வயிற்றில் வைத்து பயிற்சி செய்யவும்.

பலன்கள்: இந்த சின் முத்திரைக்கு ஞான முத்திரை என்ற ஒரு பெயரும் உண்டு. அறிவில் மலர்ச்சி, எண்ணங்களில் தெளிவு, தெளிந்த தூய சிந்தனை. இந்த தெளிந்த சிந்தனையைத் தருவது தான் சின் முத்திரை. மூளை செல்களும், மூளை திறனும் மிகச் சிறப்பாக இயங்கும். மன அழுத்தம் நீங்கும். மன அமைதி கிட்டும். மனிதனின் மனநிலைக்கு ஏற்ப மூளை செயல்படும் பொழுது, மூளையில் மின் அதிர்வலைகளுக்கு ஏற்ப பீட்டா, ஆல்பா, தீட்டா, டெல்டா என்று நான்கு விதமாக அதிர்வலைகள் ஏற்படுகின்றது.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.