சுப்பர் லீக்கின் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு ஏற்கனவே தகுதிபெற்றுள்ள கலம்போ எவ்சி கழகத்துக்கும் சுப்பர் சிக்ஸுக்குள் நுழைய இன்னும் ஒரு வெற்றி தேவைப்படும் சீ ஹொக்ஸ் கழகத்துக்கும் இடையிலான சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டி கொழும்பு சுகததாச அரங்கில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
கலம்போ எவ்சி இதுவரை 6 போட்டிகளில் 4 வெற்றிகள், 2 வெற்றி தோல்வியற்ற முடிவுகள் என்ற பேறுபேறுகளுடன் தோல்வி அடையாத அணியாக 14 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் இருக்கிறது.
சீ ஹோக்ஸ் 3 வெற்றிகள், 2 வெற்றி தோல்வியற்ற முடிவுகள், ஒரு தோல்வி என்ற பெறுபேறுகளுடன் 11 புள்ளிகளுடன் 4ஆம் இடத்தில் இருக்கிறது.
இன்றைய போட்டியில் சீ ஹோக்ஸ் வெற்றிபெற்றால் நான்காவது அணியாக சுப்பர் சிக்ஸில் விளையாட தகுதிபெறும்.
அப்கன்ட்றி லயன்ஸ் (21 புள்ளிகள்), றினோன் (15 புள்ளிகள்), கலம்போ எவ்சி (14 புள்ளிகள்) ஆகிய அணிகள் சுப்பர் சிக்ஸில் விளையாட ஏற்கனவே தகுதி பெற்ற மூன்று அணிகளாகும்.
கலம்போ எவ்சி இன்றைய போட்டியில் சீ ஹோக்ஸ் அணியிடம் கடும் சவாலை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு அணிகளிலும் இடம்பெறும் வீரர்களை ஒப்பிடுகையில் சீ ஹோக்ஸ் வீரர்கள் திடகாத்திரமானவர்களாகவும் வேகமாக விளையாடக்கூடியவர்களாவும் திகழ்கின்றனர். எனவே அவர்களது வேகத்திற்கு ஈடுகொடுக்க கலம்போ எவ்சி கடுமையாக முயற்சிக்க வேண்டும்.
மேலும் இந்த சுற்றுப் போட்டியில் இதுவரை கலம்போ எவ்சி மாத்திரமே ஒரு கோலைத்தானும் விட்டுக்கொடுக்காமல் இருக்கிறது. அனுபவசாலியான கோல்காப்பாளர் மொஹமத் இம்ரான் ஒவ்வொரு போட்டியிலும் மிகத் திறமையாக செயற்பட்டு கோல்களைத் தடுத்த வண்ணம் உள்ளார்.
இன்றைய போட்டியில் அவர் தனது திறமை மூலம் கலம்போ எவ்சி அணிக்கு வெற்றிகிடைக்கச் செய்வார் என எதிர்பாரக்கப்படுகிறது.

