மக்கள் தொகை பெருகியதாலும் அதிக விளைச்சல் கிடைத்ததாலும் விளைந்த பொருட்களைப் பாதுகாத்து வைக்க வேண்டிய தேவையும் பண்டமாற்றுச் செய்யும் தேவையும் ஏற்பட்டது. சுமேரியர் செம்மறியாடுகள், ஒருவித மரை என்பவற்றை அதிகமாக வைத்திருந்தனர். விலங்குகளின் தோலிலிருந்து ஆடைகள் செய்யப்பட்டன.
பின்னர் செம்மறி ஆட்டின் மயிரிலிருந்து நூல் நூற்று ஆடைகள் செய்யப்பட்டன. பண்டமாற்றுச் செய்யும்போது கணக்கு வைப்பதற்காக களிமண் உருண்டைகள், வடிவங்கள் செய்து பரிமாறப்பட்டன. உதாரணத்துக்கு ஆட்டுப்பட்டியிலிருந்து நான்கு ஆடுகள் வாங்கினால் ஆட்டுக்கான பொருட்களைக் கொடுத்து களிமண் கோளங்களையும் கொடுக்க வேண்டும். வணிகம் முடிந்தபின் கோளங்களின் எண்ணிக்கையை வைத்து எத்தனை ஆடுகள் வெளியே போயின எனக்கணக்கிடுவர்.
விவசாயத்தைப் பெருக்குவதற்கு கலப்பையைக் கண்டுபிடித்த சுமேரியர் கலப்பையில் உழுவதற்கும் பாரங்களைச் சுமப்பதற்கும் மாடுகளைப் பயன்படுத்தினர். கலப்பின் மேற்பகுதியில் கூம்பு வடிவிலான ஒன்றை வடிவமைத்து, உழுது கொண்டு செல்லும்போதே தானாக விதை விழுமாறான பொறிமுறையையும் உருவாக்கினர். காலம் செல்லச்செல்ல சக்கரத்தைக் கண்டுபிடித்து பாரங்களை இழுப்பதற்கு இருசக்கர வண்டிலையும் உருவாக்கினர்.
களிமண்ணால் குடிசைகளையும் புற்களினால் கூரையும் அமைத்து நாகரிகத்தின் அடுத்த படியில் கால் வைத்தனர் சுமேரியர். சிலநூறு வருடங்களின் பின்னர் களிமண்ணினால் செங்கல் என்னும் பாரிய கண்டுபிடிப்பும் இவர்களுக்கே உரியது. செங்கல் என்பது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் களிமண் வடிவத்தைச் சுட்டெடுப்பது. செங்கற்களைச் சுடுவதற்கு பாரிய சூளைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன என ஆய்வுகள் கூறுகின்றன. அதன் தொடர்ச்சியாக பானைகள் சட்டிகள் களிமண்ணால் ஆக்கப்பட்டுச் சூளைகளில் சுட்டெடுக்கப்பட்டன என்றும் பானைகள் சட்டிகள் போன்றவை செய்ய அச்சுப் பொறிமுறையும் காலப்போக்கில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
செங்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் தமக்கென வீடுகளை அமைத்தனர். புயல் வெள்ளம் போன்றவற்றால் வீடுகள் சேதமானபோது உடனே மீண்டும் கட்டப்பட்டது. செங்கற்களை அடுக்கிக் களிமண்ணால் பூசி வீடுகள் கட்டும்போது உடைந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்பட மாட்டா. கற்கள் அப்படியே தானிருக்கும்.
தொடரும் …
நிவேதா உதயராஜன் | வரலாற்று ஆய்வாளர் | லண்டனிலிருந்து
இத்தொடரின் முன்னைய பகுதிகள்..
http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-introduction/
http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-histry-1/
http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-2-2/
http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-history-3/
(சர்ச்சைக்குரிய விடயம் ஆனால் ஆழமாகப் பார்க்கவேண்டிய வரலாறு. திரு சிவகனேஷன் அவர்களுடைய வழிகாட்டலுடன் திருமதி நிவேதா உதயராஜன் காத்திரமான ஆய்வு ஒன்றைச் செய்துள்ளார். சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? யார் இந்த சுமேரியர்? இவர்களுடைய நாகரிக வளர்ச்சி எங்கே ஆரம்பமானது? இவர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? அப்படியானால் தமிழர் யாருடைய வழித்தோன்றல்? இவற்றுக்கான விடைகளைத் தேடி விரிகின்றது இத்தொடர்…)