எகிப்தின் சூயஸ் கால்வாயில் பழுதாகி நின்ற மால்டா நாட்டு கப்பலால் நேற்று அங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எகிப்தில் அமைந்துள்ள 193 கிலோ மீட்டர் நீளமும் 300 மீட்டர் அகலமும் உடைய சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கிறது.
ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையே பிரபல வர்த்தக பாதையாக இது திகழ்கிறது. பல நாடுகளின் அன்னிய செலாவணிக்கு முக்கிய ஆதாரமாகவும் இந்தக் கால்வாய் உள்ளது. ஏனெனில், உலக வர்த்தகத்தில் 10 சதவீதம் இதன் வழியாகவே நடைபெறுகிறது.
இந்தக் கால்வாயில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அது உலக பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்நிலையில், மால்டா நாட்டுக்குச் சொந்தமான சீவிகார் என்ற கப்பல் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு நேற்று சென்றது. கால்வாயின் ஒற்றைப்பாதை வழியாக சென்றபோது, திடீரென கப்பலின் எண்ணெய் டேங் உடைந்து பழுது ஏற்பட்டது.
எனவே, பின்னால் வந்திருந்த 8 கப்பல்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, 3 இழுவை படகுகள் அங்கு அனுப்பப்பட்டு, அந்தக் கப்பல் இழுத்துக் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கப்பல் பழுது சரிசெய்யப்பட்டு, அங்கிருந்து புறப்பட்டது.
இந்தச் சம்பவத்தால் அங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக சூயஸ் கால்வாய் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் சப்வத் தெரிவித்தார்.