வடக்கு இலண்டனின் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் யூத தொண்டு நிறுவனமான ‘ஹட்சோலா’வுக்குச் சொந்தமான நான்கு அம்பியுலன்ஸ்கள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தில், புதன்கிழமை கைது செய்யப்பட்ட 47 மற்றும் 45 வயதுடைய இங்கிலாந்து குடிமக்கள் இருவரும் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தீ வைத்ததாகச் சந்தேகத்தின் பேரில் கைதான இவர்கள், வரும் ஏப்ரல் மாதம் வரை கடும் நிபந்தனைகளுடன் வெளியில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று இலண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இலண்டன் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவர் ஹெலன் பிளநாகன் கூறுகையில், “இந்தக் கொடூரமான தாக்குதலில் சம்பந்தப்பட்ட அனைவரையும் அடையாளம் காணும் பணியில் எங்கள் குழுவினர் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர். பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் மீது கடுமையான கண்காணிப்பு மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
மேலும், இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வரும் உள்ளூர் யூத சமூகத்தினருக்கும், பொதுமக்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்தச் சம்பவத்தை ஒரு ‘யூத எதிர்ப்பு வெறுப்புக் குற்றமாக’ கருதி பொலிஸார் தொடர்ந்து கையாண்டு வருகிறனர்.
இந்த வழக்கைப் பயங்கரவாதத் தாக்குதல் என்று இதுவரை வகைப்படுத்தவில்லை என்றாலும், அதன் தீவிரத் தன்மை கருதி பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினரே விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, ‘ஹரகத் அஷாப் அல்-யமின் அல்-இஸ்லாமிய’ என்ற அமைப்பு இதற்குப் பொறுப்பேற்றுள்ளதாகக் கூறியதையடுத்து, இதன் பின்னணியில் ஈரானுக்குத் தொடர்பு இருக்கலாமா என்ற கோணத்தில் ரகசியத் தகவல்களைப் பொலிஸார் சேகரித்து வருகின்றனர்.
இந்தத் தாக்குதலில் சிசிடிவி காட்சிகளில் பதிவான மூன்றாவது நபரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தற்போது இலண்டன் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.