Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பிளஸ் 2 தேர்வுகள் ரத்து – நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் ரத்தாகுமா?

பிளஸ் 2 தேர்வுகள் ரத்து – நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் ரத்தாகுமா?

3 minutes read

புதுடெல்லி:  சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு  ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழகம்  உட்பட பல மாநிலங்கள் 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்துள்ளன. இதனால், ‘நீட்’ உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் ரத்தாகுமா என்ற எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக,  மறு ஆய்வு கூட்டத்தை நடத்த தேசிய தேர்வு முகமை  முடிவு செய்துள்ளது. விரைவில் நுழைவுத் தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிபார்க்கப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்று  இரண்டாம் அலையின்  பாதிப்பு காரணமாக, இந்த ஆண்டு  சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு  கடந்த 1ம் தேதி அறிவித்தது. மத்திய அரசின் அறிவிப்பை பின்பற்றி  உத்தரகாண்ட், ஒடிசா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உட்பட 10  மாநிலங்கள், மாநில பாடத்திட்டத்தின்கீழ் நடக்கும் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வை ரத்து செய்தன.  தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.  இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்ச்சியை  எந்த வகையில்   நிர்ணயிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய 12 பேர்  கொண்ட குழு  அமைக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வு  கட்டுப்பாட்டு அலுவலர்  சயாம் பரத்வாஜ் வெளியிட்ட அறிவிப்பில், ‘கொரோனா   பரவல் காரணமாக மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் தெரிவித்த கருத்துகளின்   அடிப்படையில் இந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய முடிவு   செய்யப்பட்டது. எனவே, இந்தாண்டு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு   நடத்தப்படாது. மேலும், அந்த மாணவர்களுக்கு எந்த வகையில் தேர்ச்சியை மதிப்பீடு செய்யலாம்  என்பது குறித்து ஆய்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள முடிவெடுத்து,  மத்திய கல்வி மற்றும் எழுத்தறிவுத்   துறையின் இணைச் செயலர் விபின் குமார், தலைமையில்  12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு தனது அறிக்கையை அடுத்த 10 நாட்களில்   சமர்ப்பிக்கும் என்று தெரிவித்து இருந்தார். இதற்கிடையே, தமிழகத்தில் மாநில கல்வித்திட்டத்தின்  கீழ், பிளஸ் 2 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து  மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பொதுமக்களிடம் நேற்று  முன்தினம்   வரை ஆலோசனை நடத்தியது. பெரும்பாலானவர்கள் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக  முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். ‘மாணவர்,  பெற்றோர், கல்வியாளர்கள், அரசியல் கட்சியினர், மருத்துவர்கள்  உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக  இந்தாண்டு பிளஸ் 2  வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் மட்டுமே உயர்கல்விக்கான தகுதியாக கருதப்பட  வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

ஆயினும் மாணவர்களின்  உடல்நலம் மற்றும் மனநலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அனைத்துத்  தரப்பினரும் உறுதியாக இருப்பதால் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து  செய்யப்படுகிறது.  மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவு  செய்வதற்காக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும்.  இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு,  அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே உயர்கல்வி சேர்க்கை நடைபெறும்’  என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

மாநில பாடத்திட்டத்திலான பிளஸ் 2  பொதுத்  தேர்வை தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள்  ரத்து செய்துவிட்டதால், மருத்துவக்  கல்விக்கான நுழைவு தேர்வான ‘நீட்’ உள்ளிட்ட தேர்வுகளையும் ரத்து செய்ய  வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய அரசிடம் கோரி வருகின்றன.


 முன்னதாக, ஜேஇஇ – மெயின் நுழைவு தேர்வு கடந்த  ஏப்ரல் மாதத்திலும், நீட் நுழைவு தேர்வு மே மாதத்திலும் நடத்துவதாக திட்டமிட்டு இருந்த நிலையில்,  கொரோனா தொற்று  பரவல் அச்சம் காரணமாக, இரு நுழைவு  தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல்  ஒத்திவைக்கப்பட்டன. இருப்பினும்,  பொறியியல் நுழைவுத் தேர்வு ஜே.இ.இ  மெயின் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வு நீட் ஆகிய இரண்டும் வரும்  ஆகஸ்டில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேற்கண்ட இரு தேர்வுகளையும்,  கொரோனா அச்சத்துக்கு மத்தியில் நடத்த முடியுமா என்பதை தீர்மானிப்பதற்கான தேசிய தேர்வு முகமையின்   மறுஆய்வுக் கூட்டம், விரைவில் நடக்கவுள்ளது. அடுத்த 15 நாளில் தேர்வு  நடத்துதல் அல்லது ரத்து செய்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

 மாணவர்களின் நலன் கருதி, நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று,  நாடு முழுவதும் பெரும்பாலான அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் வலியுறுத்தி  வருகின்றனர். அதனால், நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் ரத்து  செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்ச்சியை அறிவிக்கவும், மதிப்பீடுகள் செய்யவும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர்  தலைமையில், உயர்கல்வித்துறை செயலாளர், சென்னைப் பல்கலைக் கழக துணை வேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான அறிவிப்பை  முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்க உள்ளார்.

ஜேஇஇ – மெயின் நுழைவு தேர்வு கடந்த  ஏப்ரல் மாதத்திலும், நீட் நுழைவு தேர்வு மே மாதத்திலும் நடத்துவதாக  திட்டமிட்டு இருந்த நிலையில், கொரோனா தொற்று  பரவல் அச்சம் காரணமாக, இரு  நுழைவு  தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல்  ஒத்திவைக்கப்பட்டன. மேற்கண்ட இரு தேர்வுகளையும்,  கொரோனா  அச்சத்துக்கு மத்தியில் நடத்த முடியுமா என்பதை தீர்மானிப்பதற்கான தேசிய  தேர்வு முகமையின்  மறுஆய்வுக் கூட்டம், விரைவில் நடக்கவுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2  தேர்ச்சியை மதிப்பீடு செய்ய பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில், உயர்கல்வித்துறை செயலாளர், சென்னைப்  பல்கலைக் கழக துணை வேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழு  அமைக்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More