2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டமொன்றில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதைக் கொண்டாடியதாகக் கூறி மூன்று காஷ்மீரி மாணவர்களை வட இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போட்டியின் போது அவர்கள் “இந்தியாவிற்கு எதிரான மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவான” கோஷங்களை எழுப்பியதாகவும், “பகைமை மற்றும் சைபர் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்காக” அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் அணியினரை உற்சாகப்படுத்தியதாகக் கூறி முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறையின் சமீபத்திய இந்த கைதானது உத்தரப் பிரதேஸ் மாநிலத்தில் ஆக்ரா நகரத்தில் நடந்துள்ளது.
டுபாயில் ஞாயிற்றுக்கிழமை நடந்த டி-20 உலகக் கிண்ணத்தின் 16 ஆவது ஆட்டத்தில் பரம எதிரிகளை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 29 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான முதல் உலகக் கிண்ண வெற்றியை பாகிஸ்தான் பதிவுசெய்துள்ளதுடன், வரலாற்றையும் மாற்றி அமைத்தமையும் குறிப்பிடத்தக்கது.