நாட்டை அடைந்துள்ள இரண்டு கப்பல்கள் மூலம்
நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் மற்றும் பெட்ரோலை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றும் நாடு முழுவதும் எரிபொருளுக்கான நீண்ட வரிசை காணப்பட்டது.
இந்திய கடன் ஒப்பந்தத்தின் கீழ் எரிபொருளுடனான மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக பெட்ரோலிய மொத்த களஞ்சிய முனையத்தின் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் M.R.W. டி சொய்சா தெரிவித்துள்ளார்.
கப்பல்களில் இருந்து தற்போது எரிபொருள் இறக்கப்படுவதாகவும், இன்று முதல் நாடு முழுவதும் அவற்றை விநியோகிக்க சுமார் 450 பௌசர்கள் பயன்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மிரிஸ்ஸ பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் நின்ற மக்கள் இன்று காலை வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் எரிபொருள் நிலையத்திற்கு பௌசர் வந்திருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
காலியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் இல்லை என்ற பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், பெட்ரோல் வாங்க நீண்ட வரிசை காணப்பட்டது.