வவுனியா, ஓமந்தைப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரக அதிகாரி பிரம்மஸ்ரீ சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் சர்மாவே (வயது 52) உயிரிழந்துள்ளார்.
இந்தியத் துணைத் தூதரக அதிகாரி தனது தனிப்பட்ட விஜயமாக வட இந்தியா இமயமலை சாரலுக்கு வழிபாட்டுக்காகச் சென்றுவிட்டு கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக நாடு திரும்பி யாழ்ப்பாணத்துக்குக் காரில் வந்து கொண்டிருந்த வேளை டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்தின் போது காரைச் செலுத்தி வந்த யாழ். வடமராட்சி – நெல்லியடியைச் சேர்ந்த பிரபாகரன் சர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவரின் மனைவியான யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் பி.சீத்தாலட்சுமி (வயது – 50), மகன் பி.அக்ஸய் (வயது 27), மாமனார் சுவாமிநாதன் ஐயர் (வயது – 70) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் ஓமந்தைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




