மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னங்குடா கண்ணகியம்மன் ஆலய வீதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
36 வயதுடைய நபரே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீர் விநியோகம் தொடர்பாக இருவருக்கு இடையே நடைபெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதன் காரணமாக வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டுத் துப்பாக்கியால் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்த உள்நாட்டுத் துப்பாக்கியும் வவுணதீவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.