ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை உடன் கைது செய்யுமாறு அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை பிற்பகல் இந்தப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்று தொடர்பான விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தமையால் அவருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை மாலைதீவு சென்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாலைதீவுக்குச் சென்ற அதே விமானத்திலேயே நாமல் ராஜபக்ஷ பயணித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற மாலைதீவு சென்றுள்ள நாமல் எம்.பி., நாளை மாலை நாடு திரும்பவிருந்தார். எனினும், தனது பிடியாணைக்கு எதிராக மனுத் தாக்கல் செய்து நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்காக அவர் நாளை காலை நாடு திரும்பவுள்ளார் என்று அறியமுடிகின்றது.