வாஷிங்டன்: அமெரிக்காவின் துணை அட்டர்னி ஜெனரலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வனிதா குப்தா நியமிக்கப்பட்டு உள்ளார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு, இந்தியர்களுக்கு அதிகாரமிக்க பதவிகளை வழங்கி வருகிறார். துணை அதிபராக ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரீஸ் இருக்கிறார்.
இந்த கிரீடத்தில் மகுடம் தரிக்கும் வகையில், அமெரிக்காவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான துணை அட்டர்னி ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த வனிதா குப்தா நியமிக்கப்பட்டு இருக்கிறார். அமெரிக்க செனட்டில் நேற்று நடந்த வாக்குப்பதிவில் 51-49 என்ற வாக்கு விகிதத்தில் அவர் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் நீதித்துறையின் அதிகாரம் மிக்க 3வது நபர் என்ற பெருமையையும், இந்த பொறுப்பை வகிக்கும் வெள்ளையர் அல்லாதவர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் குடியேறிய இந்திய பெற்றோரின் மகளான வனிதா குப்தா, பிலடெல்பியா மாகாணத்தில் பிறந்தவர். யேல் பல்கலைக் கழகத்திலும், நியூயார்க் பல்கலைக் கழகத்திலும் சட்டம் பயின்று சிவில் உரிமைகள் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவருக்கு அதிபர் பைடன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர், அமெரிக்காவின் துணை அட்டர்னி ஜெனரல் பதவியை வகிக்கப் போகும் முதல் பெண் என்ற வரலாற்று சாதனை படைக்கப்பட்டு உள்ளது.