பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றி தீக்காயங்களுடன் மரணமடைந்துள்ள சிறுமி ஹிஷாலினியின் உடல் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக இன்று வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்படவுள்ளது.
பிரதேச பரிசோதனையை மேற்கொள்வதற்காக நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விசேட மருத்துவக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பெயரிடப்பட்டு சட்ட மாஅதிபரின் பரிந்துரைக்கமைய நீதிமன்றத்தினால் மேற்படி குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேற்படி மருத்துவர்கள் குழுவில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் நீதிமன்ற மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியர் திருமதி ஜீன் பெரேரா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட நீதிமன்ற மருத்துவ விஞ்ஞான பிரிவு தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான டாக்டர் சமீர குணவர்தன மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலையின் நீதிமன்ற மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான விசேட நீதிமன்ற மருத்துவர் பிரபாத் சேரசிங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
டயகம பிரதேசத்தில் உள்ள சிறுமியின் புதைகுழியில் மேற்படி மருத்துவர் குழுவின் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை சிறுமி ஹிஷாலினியின் சடலம் மீண்டும் தோண்டியெடுக்கப்படவுள்ளது. அதற்கிணங்க அப்பகுதி தற்போது பொலிசாரின் தீவிர பாதுகாப்புக்கு உட்படு த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.