புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில், வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் ஒன்றிய அரசு அமைத்தது.
இதையடுத்து, மேற்கண்ட இரு அமைப்புகளிலும் நான்கு மாநிலங்கள் தரப்பில் பிரதிநிதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஆணைய கூட்டத்தின் போது அணை மற்றும் நீர் பங்கீடு குறித்த பிரச்சனைகளையும், அதேப்போன்று ஒழுங்காற்று குழு கூட்டத்தின் போது அணை பாதுகாப்பு நிலவரங்களும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரப்படுகிறது.
இந்நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 15வது கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது வரும் திங்கட்கிழமை, அதாவது 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.