செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஐரோப்பாவில் வரலாறு சொல்லும் வறண்ட ஆறுகள் – மண்ணுக்குள் புதைந்திருந்த போர்க்கால ஆயுதங்கள் வெளிவருகின்றன!

ஐரோப்பாவில் வரலாறு சொல்லும் வறண்ட ஆறுகள் – மண்ணுக்குள் புதைந்திருந்த போர்க்கால ஆயுதங்கள் வெளிவருகின்றன!

2 minutes read

ஐரோப்பா முழுவதும் நிலவி வரும் கடுமையான வறட்சியின் காரணமாக, பல தசாப்தங்களாக மண்ணுக்குள் புதைந்திருந்த இரண்டாம் உலகப் போர்க் கால இராணுவ வாகனங்கள், போர்க்கப்பல்களின் சிதைவுகள் மற்றும் வெடிமருந்துகள் தற்போது வெளிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆறுகளில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருவதால், இதுவரை நீருக்கடியில் மறைந்திருந்த போர்க்காலச் சின்னங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிச்சத்திற்கு வருகின்றன.

ஜெர்மனி உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வறட்சியின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜெர்மானியப் போர்க்கப்பல்களின் சிதைவுகள், வெர்மாக்ட் (Wehrmacht) காலத்து மோட்டார் சைக்கிள் மற்றும் வெடிகுண்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காட்டுத்தீயுடன் வெடிமருந்து அச்சுறுத்தலும்

மேற்கு ஐரோப்பாவில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள காட்டுத்தீ சம்பவங்களும் புதிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் காட்டுத்தீ பரவிய பகுதிகளில், இரண்டாம் உலகப் போரின் போது புதைக்கப்பட்டிருந்த அல்லது கைவிடப்பட்ட வெடிமருந்துகள் வெப்பத்தின் காரணமாக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் உள்ள போர்டோ நகருக்கு அருகே ஏற்பட்ட காட்டுத்தீ ஒன்றின் போது, இரண்டாம் உலகப் போர்க் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஏராளமான வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால மீட்புப் பணியாளர்கள், காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதுடன், நிலத்துக்குள் புதைந்திருக்கக்கூடிய வெடிபொருட்கள் தொடர்பிலும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பெல்ஜியத்தில் வெடிப்புச் சத்தம்

கிழக்கு பெல்ஜியத்தின் லீஜ் மாகாணத்திலும் இதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கு காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில் புதைக்கப்பட்டிருக்கக்கூடிய வெடிமருந்துகளை கையாள்வதற்காக அவசரகால சேவைகள் தயாராகி வருவதாக உள்ளூர் ஆளுநர் ஹெர்வே ஜமார் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தப் பகுதிகளில் சமீபத்தில் ஆங்காங்கே வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் காட்டுத்தீயை எதிர்கொள்ளும் பணியாளர்களுக்கு தீ மட்டுமன்றி, பல ஆண்டுகளாக நிலத்துக்குள் மறைந்திருக்கும் போர்க்கால வெடிமருந்துகளும் ஆபத்தாக மாறியுள்ளன.

டானூப் நதியில் வெளிப்பட்ட ஜெர்மானியப் போர்க்கப்பல்

இதற்கிடையில், ருமேனியாவுக்கும் செர்பியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் பாயும் டானூப் நதியிலும் வறட்சியின் தாக்கத்தால் வரலாற்றுச் சின்னம் ஒன்று வெளிப்பட்டுள்ளது.

செர்பியாவின் பிரஹோவோ பகுதிக்கு அருகில், டானூப் நதியின் மீது அமைந்துள்ள ஜெர்டாப் II அணைக்கு முன்னால், இரண்டாம் உலகப் போர்க் காலத்தைச் சேர்ந்த ஜெர்மானியப் போர்க்கப்பல் ஒன்றின் சிதைவுகள் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக வெளிப்பட்டுள்ளன.

நீர்மட்டம் குறைந்து வருவதால் இதுபோன்ற வரலாற்று சிதைவுகள் மட்டுமன்றி, போர்க்கால வெடிபொருட்களும் வெளிப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

காலநிலை மாற்றத்தின் மற்றொரு தாக்கமா?

இந்த சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்த அரிசோனா பல்கலைக்கழக ஆய்வாளர் கிறிஸ்டினா கிரீன், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர வறட்சி, பல ஆண்டுகளாக மறைந்திருந்த போரின் தடயங்களை மீண்டும் வெளிக்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது கருத்துப்படி, “போரின் சுவடுகள் மெல்ல மெல்ல வெளிப்படுகின்றன.”

இரண்டாம் உலகப் போர் முடிந்து பல தசாப்தங்கள் கடந்துவிட்ட போதிலும், அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் இராணுவப் பொருட்கள் இன்னும் ஐரோப்பாவின் மண்ணிலும் ஆறுகளிலும் புதைந்துள்ளன.

தற்போது காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் வறட்சி, வெப்ப அலைகள் மற்றும் காட்டுத்தீ போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள், இந்த வரலாற்றுச் சுவடுகளை மீண்டும் வெளிக்கொண்டு வருவதுடன், அவற்றுடன் தொடர்புடைய பாதுகாப்பு அபாயங்களையும் அதிகரித்து வருகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.