பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக இன்று (21) பகல் 2 மணியளவில் தனது 94ஆவது வயதில் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அன்னாரின் பூதவுடல், தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை 5 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
கன்னட மொழி பேசும் குடும்பத்தில் டிசம்பர் 12, 1931ஆம் ஆண்டு பிறந்த சௌகார் ஜானகி தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதுதவிர 300க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் அவர் நடித்துள்ளார்.
நடிகை சௌகார் ஜானகி 1959ஆம் ஆண்டு வெளியான கன்னட மொழியில் முதல் பான் இந்தியா திரைப்படமான மகிஷாசுரமர்தினியில் நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் சௌகார் ஜானகி டாக்டர் ராஜ்குமாருடன் நடித்தார். அந்த வகையில், சௌகார் ஜானகி புகழ்பெற்ற பான் இந்தியா நடிகை என்ற அந்தஸ்த்தையும் பெற்றார்.
தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்ட ஷவுகாரு என்ற திரைப்படத்தில் தான் நடிகை சௌகார் ஜானகி முதன் முதலில் நடித்தார்.
இந்தப் படத்தை இயக்குநர் எல்.வி. பிரசாத் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தான் இவருக்கு சௌகார் என்ற புனைபெயர் வந்தது.
இவர் 1952ஆம் ஆண்டு வெளியான வளையாபதி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகில் முதன் முதலில் அறிமுகமானமை குறிப்பிடத்தக்கது.
‘காவியத் தலைவி’, ‘புதிய பறவை’, ‘நீர்க்குமிழி’, ‘மகாகவி காளிதாஸ்’, ‘எதிர்நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘உயர்ந்த மனிதன்’, ‘தில்லுமுல்லு’, ‘வெற்றி விழா’, ‘தேவி’, ‘ஹே ராம்’ , ‘தம்பி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கும் சௌகார் ஜானகி இறுதியாக 2020 ஆம் ஆண்டில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘பிஸ்கோத்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சௌகார் ஜானகி நடிப்பில் வெளியான 400 ஆவது திரைப்படமாகும்.
ஏழு தசாப்தங்களுக்கு மேல் திரை உலகில் கலை பயணத்தை மேற்கொண்ட அவர் என்.டி. ராமராவ், சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ராஜ்குமார், நாகேஸ்வரராவ் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகின் முடிசூடா நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.