புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று டுவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நடிகை சாய் பல்லவி கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மனித இனத்தின் மீதிருந்த நம்பிக்கை வேகமாக குறைந்து வருகிறது. குரலற்றவர்களுக்கு உதவுவதற்காக கொடுக்கப்பட்ட அதிகாரத்தை நாம் தவறாக பயன்படுத்துகிறோம். பலவீனமானவர்களை நாம் காயப்படுத்துகிறோம். நம் அரக்கத்தனமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள குழந்தைகளைக் கொல்கிறோம்.
இப்படிப்பட்ட நிகழ்வுகளைப் பார்த்து எதுவும் செய்ய இயலாத பயனற்ற மோசமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் வாழும் இந்த மனிதத்தன்மையற்ற உலகம் இன்னொரு குழந்தையின் பிறப்புக்குத் தகுதியானது அல்ல.
ஊடக வெளிச்சத்துக்கு வரும் குற்றங்களுக்கும், சமூகவலைதளத்தில் டிரெண்ட் செய்தால் மட்டுமே குற்றங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நிலை வரக்கூடாது என்று நான் வேண்டுகிறேன். இவ்வாறு இருந்தால் புகார் அளிக்கப்படாமல், கவனிக்கப்படாமல் போகும் குற்றங்கள் என்ன ஆகும்?
பல கொடூரமான குற்றங்கள் நடக்கின்றன. அதில் ஒன்றிற்கு மட்டும் ஹேஷ்டேக் உருவாக்குகிறோம்” என சாய் பல்லவி பதிவிட்டுள்ளார்.