‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியிருக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.

அத்துடன் இப்படத்தின் வெளியீட்டு திகதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘போடா போடி’, ‘நானும் ரவுடிதான்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்தப் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
எஸ். ஆர். கதிர் மற்றும் விஜய் கார்த்தி கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, அனிருத் இசையமைத்திருக்கிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எனும் பட நிறுவனத்திற்காக, இயக்குநர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ஏப்ரல் 28ஆம் திகதியன்று இப்படம் உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகிறது.

இதனை முன்னிட்டு இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியிடப்பட்டது.
டீசரில் ஆலயம் ஒன்றில் நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தாவிடம் அவரது காதலராக நடித்திருக்கும் நாயகன் விஜய் சேதுபதி பேசும் வசனங்கள் இளைய தலைமுறையினரையும், இணைய தலைமுறையினரையும் கவர்ந்திருக்கின்றன.
இப்படத்தின் டீசருக்கு எதிர்பார்ப்பை விட கூடுதலாக ஆதரவு கிடைத்து வருகிறது.
படத்தின் டீசர் வெளியான குறுகிய நேரத்தில் ஒரு மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது.