தயாரிப்பு : மேதகு திரைக்களம்
இயக்கம் : இரா. கோ. யோகேந்திரன்.
நடிகர்கள்: கௌரி சங்கர், நாசர் மற்றும் பலர்
மேதகு திரைக்களம் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘மேதகு 2’. பட மாளிகைகளில் வெளியாகாமல் நேரடியாக தமிழ் ஓடிடி என்னும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களை கவருமா..? இல்லையா..? என்பதை காண்போம்.
பிரபலமான சர்வதேச தலைவர்களை பற்றிய சுயசரிதையை திரைப்படமாக உருவாக்கும் போது அவர்களைப் பற்றிய தகவல்கள் செயல்பாடுகள் நடவடிக்கைகள் போன்றவை செய்திகளாக அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் வெளியாகி இருக்கும்.
வேறு சிலர் அந்த தலைவரை பற்றி ஆய்வு செய்தும், அவருடைய கொள்கைகள், ஆளுமை திறன் குறித்து பல்வேறு கோணங்களில் நூல்களையும் எழுதி இருப்பார்கள்.
இதனை பலர் வாசித்திருக்க கூடும். இதன் காரணமாக குறிப்பிட்ட தலைவரை பற்றிய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கும் போது, திரைக்கதையில் அடுத்து என்ன? என்பதை விட, சம்பவத்தின் சுவாரசியமான பின்னணி, அதனை சாத்தியப்படுத்திய உத்தி… போன்றவற்றை விரிவாக இடம்பெற வேண்டும் என பார்வையாளர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அதிலும் ஈழ விடுதலைக்காக தன்னெழுச்சியாக நடைபெற்ற மக்கள் புரட்சியை தலைமை ஏற்று வழி நடத்திய மேதகு பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கும் போது கூடுதல் கவனத்துடன் உருவாக்க வேண்டும். உருவாக்கியிருக்க வேண்டும்.
ஆனால் ‘மேதகு 2’ படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினர், நூறு சதவீத நாடக தன்மையுடனும், ஏற்றம் பெற்றிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாமலும், திறமையான கலைஞர்களை இந்த படைப்பில் பங்குப்பற்ற செய்யாமலும், தங்களுக்கு கிடைத்த குறைந்தபட்ச நிதி ஆதாரம், படைப்பு சுதந்திரம், கலைஞர்கள், தொழில்நுட்ப வசதி ஆகியவற்றை வைத்துக் கொண்டு ‘மேதகு 2’ படைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். இதனால் இந்த திரைப்படம் எம்மாதிரியான விளைவை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலையிலிருந்து, ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால் சரிதான் என்ற எண்ணத்தில் ‘மேதகு 2’ படைப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.
மேதகு படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் வீரியம் குறைவாகவே இருக்கிறது. இருப்பினும் உரிமை மறுக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் வலியை பதிவு செய்திருப்பதால் இந்த படைப்பை வரவேற்கலாம்.
இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இப்படம் வெளியாவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருப்பதால் எம்முடைய மக்கள் காண்பதற்கு ஒரு வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இருப்பினும் ‘மேதகு’ என்ற பெயரை உச்சரித்தால், கரவொலி எழுப்பும் தமிழின உணர்வு ததும்பும் ஆதரவாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு வரப் பிரசாதம்.