Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கொன்றால் பாவம் | திரைவிமர்சனம்

கொன்றால் பாவம் | திரைவிமர்சனம்

2 minutes read

தயாரிப்பு: ஐந்ஃபேக் ஸ்டுடியோஸ் & டி பிக்சர்ஸ்

நடிகர்கள்: சார்லி, சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், ஈஸ்வரி ராவ் மனோபாலா சுப்ரமணிய சிவா சென்ராயன் மற்றும் பலர்.

இயக்கம்: தயாள் பத்மநாபன்

மதிப்பீடு: 2 / 5

1915 ஆம் ஆண்டில் ஆங்கில மொழியில் வெளியான குறு நாடகத்தை அடியொற்றி, கன்னடத்தில் வெளியான நாவலை தழுவி இயக்குநர் ‘கொன்றால் பாவம்’ என்ற பெயரில் தமிழில் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் கன்னடத்தில் உருவாகி, மாநில விருதையும் வென்றிருக்கிறது.

தெலுங்கில் தயாராகி நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட மற்றும் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதனை தொடர்ந்து காண்போம்.

1980களில் வட தமிழகத்தில் சிறு நகரமான தர்மபுரி அருகே உள்ள பென்னாகரம் எனும் இடத்தினை நிலவியல் பின்னணியாகக் கொண்டு இதன் கதை களம் அமைந்திருக்கிறது. அவ்வூரில் சார்லி – ஈஸ்வரி ராவ் தம்பதியினரும், அவர்களது மகள் வரலட்சுமி சரத்குமாரும் வறுமையின் பிடியில் சிக்கி வாழ்கிறார்கள்.

இதில் திருமணமாகாமல் முதிர் கன்னியாக வாழும் வரலட்சுமி சரத்குமார், தங்களுக்கு விடிவு காலம் பிறந்து விடாதா..! என ஏக்கத்துடன் வாழ்கிறார். ஈஸ்வரி ராவ் அந்த ஊரில் குழந்தைகளை பிரசவிக்கும் மருத்துவச்சியாகவும் பணியாற்றுகிறார். கடன் வாங்கியதால் சார்லி மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்களுக்கு சொந்தமான நிலத்திலேயே சொற்பமான கூலிக்கு வேலை செய்கிறார்கள்.

இந்நிலையில் பட்டணத்தில் அதிகமாக சம்பாதித்துவிட்டு, வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து வாழ்வதற்காக நாடோடியாய் பயணிக்கிறார் நாயகன் சந்தோஷ் பிரதாப். ஒரு நாள் பயணத்தின் ஊடாக வரலட்சுமி சரத்குமாரின் வீட்டில் தங்குகிறார். விருந்தாளியாய் வருகை தந்திருக்கும் சந்தோஷ் பிரதாப்பின் உடற்கட்டு, அழகு, கம்பீரம் ஆகியவற்றை பார்த்து அவர் மீது காமுறுகிறார் வரலட்சுமி. மேலும் அவரிடம் நகை, பணம் இருப்பதையும் அறிந்து கொள்கிறார். உடனடியாக தாய் தந்தையிடம் விருந்தாளியாய் வீட்டிற்கு வந்திருக்கும் நபரைக் கொன்று, அவரிடம் உள்ள பணம், நகையையும் கொள்ளை அடிக்க வேண்டும்.

இதனை வைத்து நம்முடைய கடனை அடைத்து விடலாம். எனக்கு பிடித்தது போல் மண வாழ்க்கையையும் அமைத்து கொள்ளலாம் என்கிறார். முதலில் மறுப்பும், தயக்கமும் தெரிவிக்கும் பெற்றோர்களிடம் தன் எதிர் கால வாழ்க்கையை விவரித்தவுடன் வேறு வழியின்றி ஒப்புக் கொள்கிறார்கள். திட்டமிட்டபடி சந்தோஷ் பிரதாப்பை இவர்கள் கொன்றார்களா..? சந்தோஷ் பிரதாப் யார்? என்பது போன்ற சுவாரசியமான உச்சகட்ட திருப்பத்துடன் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

திருமண வாழ்க்கைக்காக ஏங்கும் முதிர்கன்னி வேடத்தில் அசல் கிராமத்து பெண்ணாக தோன்றி நடிப்பில் அசத்துகிறார் வரலட்சுமி சரத்குமார். அவருடைய கைகளில் இருக்கும் டாட்டூ கதாபாத்திரத்தின் (80 காலகட்டத்திய) நம்பகத்தன்மையை உறுத்துகிறது.

நட்சத்திர நடிகர்கள் தங்களது கதாபாத்திரத்தை தோளில் சுமக்கும் போது உடல் மொழியும், உணர்வு வெளிப்பாடும், வசன உச்சரிப்பும் ஒன்றுடன் ஒன்று கலந்திருப்பதை துல்லியமாக கணக்கிட்டு திரையில் தோன்றுவார்கள். ஆனால் இந்தத் திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் சக நடிகர்களுடன் நடிக்கும் போது தனது கதாபாத்திரத்திற்கான மன நிலையிலிருந்து விலகி, இயல்பாக இருப்பது.. ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.

நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப் – நல்ல உடற்கட்டும், கதாபாத்திரத்திற்கேற்ற உடல் மொழியுடனும் திரையில் தோன்றி, நாயக பிம்பத்திற்கான நம்பகத்தன்மையை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்தி வெற்றி பெறுகிறார். இவரைப் பற்றிய நனவோடை காட்சியில் மாற வேண்டிய நிலவியல் பின்னணி.. மாறாமல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது இயக்குநரின் கவனக்குறைவை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. படத்தின் கதைக்கு இவரது கிறுக்குத்தனமான ஆசையே காரணம் என்பதும், இது உச்சகட்ட காட்சியில்  வெளிப்படுவது எதிர்பாராத உணர்வு பூர்வமான திருப்பம் என்றாலும்.. அது மட்டுமே திரைக்கதைக்கு வலு சேர்க்கும் என இயக்குநர் அவதானித்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.

சார்லி – ஈஸ்வரி ராவ் வழக்கம் போல் தங்களது திறமையை இயக்குநர் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

‘உண்மை கற்பனையை விட வினோதமானது’ என ஆழமான பொருளை கொண்ட வாசகத்தை இயக்குநர் இந்த படைப்பில் இடம்பெற வைத்தாலும்.. காமம் தொடர்பான உறவு சிக்கல்.. அருவெறுப்பைத் தான் அளிக்கிறது.

வறுமையில் வாழ்பவர்களிடம் நேர்மையுடன் கூடிய விருந்தோம்பல் இல்லை என இயக்குநர் கதைத்திருப்பது.. சமூகத்திற்கு தவறான திசையில் பயணிக்க வழிகாட்டுவது போல் இருக்கிறது. படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் எதிர்பாராத மற்றும் யூகிக்க இயலாத காட்சிகள் இடம்பெற்றிருப்பது மட்டுமே இப்படத்தின் பலம்.

பின்னணியிசை மற்றும் ஒளிப்பதிவுக்கு பாராட்டு.

கொன்றால் பாவம் – டிஜிட்டல் தள பார்வையாளர்களுக்கான உள்ளடக்கம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More