மிட்லஸ்பரோ அருகே உள்ள ஏ66 நெடுஞ்சாலையில் தவறான திசையில் வந்த கார் மோதி, இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஐந்து பேரை பொலிஸாரை கைது செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அதிகாலை 03:39 மணியளவில், மிட்லஸ்பரோ அருகே உள்ள சவுத் பேங்க் பகுதியில் ஏ66 நெடுஞ்சாலையில் இந்த கொடூர விபத்து இடம்பெற்றது. தவறான திசையில் அதிவேகமாக வந்த வோக்ஸ்வாகன் பசாட் (Volkswagen Passat) கார் ஒன்று, எதிரே வந்த கிளீவ்லேண்ட் பொலிஸாரின் ஆயுதமேந்திய பாதுகாப்புப் படைப் பிரிவு வாகனத்தின் மீது நேருக்கு நேர் பலமாக மோதியது.
விபத்துக்குள்ளான வோக்ஸ்வாகன் பசாட் காரை ஏதோ ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டதாகக் கூறி, பொலிஸார் சுமார் 7 நிமிடங்களாகத் துரத்திச் சென்றுள்ளனர். எனினும், அந்த கார் நெடுஞ்சாலையில் நுழைவதற்கு 10 விநாடிகளுக்கு முன்பாகவே பொலிஸாரின் காரைத் துரத்துவதைக் கைவிட்டதாக பொலிஸ் நடத்தைக்கான சுதந்திரமான அலுவலகம் (IOPC) தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி – சவுத் பேங்க் பகுதியில் பயங்கர விபத்து: இரு பொலிஸார் மற்றும் இளைஞர்கள் ஐவர் பலி!
விபத்தில் பலியான இளைஞர்களில் குறைந்தது ஒருவராவது, டிக் டாக் சமூக வலைத்தளத்தில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டும் வீடியோக்களில் தோன்றியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சனிக்கிழமை காலையில் இரு வாகனங்கள் மிக ஆபத்தான முறையில் இயக்கப்படுவதாக பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் வந்திருந்தன. முதலாவதாக, வோல்வோ எக்ஸ்சி60 (Volvo XC60) என்ற வாகனம் மிட்லஸ்பரோ பகுதியில் உள்ள சில வீடுகளின் மீது மோதி சேதப்படுத்தியது. விபத்துக்குள்ளான வோக்ஸ்வாகன் பசாட் கார், இந்த வோல்வோ காருடன் இணைந்து செயல்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த இரண்டு வாகனங்களும் போலியான எண் பலகைகளுடன் இயங்கிய நிலையில், தானியங்கி எண் பலகை அங்கீகார தொழில்நுட்பத்தின் (ANPR) மூலம் பொலிஸாரால் கண்டறியப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக திங்களன்று டீஸ்சைடு (Teesside) பகுதி முழுவதும் 19 முதல் 61 வயதுக்குட்பட்ட 9 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என 12 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தது மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவுடன் தொடர்பு போன்ற சந்தேகங்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இரண்டு பேர் மீது ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தற்போது கூடுதலாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 வயது சிறுவன், 18 வயது இளைஞன் மற்றும் 21 வயது இளைஞன் ஆகியோர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவில் பங்கேற்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
55 வயது நபர் குற்றவாளிக்கு உதவி செய்த சந்தேகத்தின் பேரிலும், 23 வயது நபர் கொலை மிரட்டல் விடுத்த சந்தேகத்தின் பேரிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் இந்த கொடூர விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து இளைஞர்களும், பொலிஸ் வாகனத்தில் இருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பலியானவர்களின் விவரங்கள்:
பிசி டாம் கிளஃப் (வயது 38) – பொலிஸ் அதிகாரி
பிசி மேத்யூ பிளேட்ஸ் (வயது 37) – பொலிஸ் அதிகாரி
மைக்கேல் ராபர்ட் கஹில் (வயது 23)
ஜேக்கப் மதுசியாக் (வயது 23)
மக்காய் சாடிங்டன் (வயது 18)
தியோ ரே (வயது 17)
கோல் ராபர்ட் வர்தி (வயது 17)