’ஈழத்து கல்வியுலகில் தடம் பதித்த புலமையாளரில் ஒருவரான பேராசிரியர் தில்லைநாதன் அவர்களின் வாழ்வும் படைப்புகளும் பக்குவமும் எமக்கெலாம் வழிகாட்டியாக அமைவன. அவரது மணிவிழா வேளை ’மானிடம் என்ற பெரிய குடும்பத்தின் அங்கத்தினராக பெருமைபடுத்துவார் பேராதனைப் பல்கலைக்கழக அந்நாள் துணை வேந்தர் பேராசிரியர் லெஸ்லி குணவர்த்தன . சமூக சமத்துவம் எனும் பேரிலக்குடன் தன்னைத்துருத்தாது ஆய்விலும் ,எழுத்திலும், கல்வி -சமூக மேம்பாட்டுப் பணியிலும் இயங்கிய பேராசிரியரின் மானிட நேயம் தனித்துவமானது.; அவருடன் பழகிய பொழுதுகள் கலை நயம் மிக்கவை .அவரது இழப்பு கனமானது’ .
தேசிய கலை இலக்கிய பேரவையினர் ஏற்பாட்டில் அண்மையில் யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் கலாநிதி . ந. இரவீந்திரன் தலைமையில் இடம் பெற்ற அஞ்சலி நிகழ்வில் உரையாற்றும் போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நிகழ்வில் முதலில் பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் அஞ்சலிக்குறிப்பு படிகப்பட்டது .பேராசிரியர் வ. மகேஸ்வரன்,பேராசிரியர் கி. விசாகரூபன் ஆய்வாளர் சி. ரமேஷ், சட்டத்தரணி சோ. தேவராஜா ஆகியோரின் அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன. நிகழ்ச்சியை த. ஸ்ரீ பிரகாஸ் தொகுத்து வழங்கினார்.