தமிழ் மக்களின் உரிமைகள், நீதிக்கான போராட்டம் மற்றும் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வலியுறுத்தி நீண்டகாலமாக எழுதி வரும் முக்கிய சிங்கள எழுத்தாளர் கத்யானா அமரசிங்கவின் புதிய நாவலான “யாத்திரிகா” தொடர்பான அறிமுக மற்றும் கருத்துரை நிகழ்வு ஜூலை 2ஆம் தேதி கொழும்பு மகாவலி மையத்தில் நடைபெறவுள்ளது.
விதர்ஷன வெளியீடாக வெளிவரும் ‘யாத்திரிகா’ நாவல், மாயமான அழகால் நிரம்பிய கற்பனைத் தீவான எயோரா வைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அத்தீவின் அமைதியான மக்களின் வாழ்வையும், அவர்கள் தங்கள் நிலத்துடன் கொண்டிருந்த ஆழமான ஆன்மிக உறவையும் சிதைத்தழிக்கும் பழைய காலனித்துவத்தின் புதிய வடிவமான “பசுமைக் காலனித்துவம்” (Green Colonialism) மற்றும் அதற்கு எதிரான மக்களின் எதிர்ப்புப் போராட்டத்தையே இந்நாவல் மையப்படுத்துகிறது.
மேலும், பூர்வீக மக்களின் நில உரிமை, வாழ்வுரிமை மற்றும் நீதிக்கான உலகளாவிய அரசியல்–வரலாற்று உரையாடலை முன்வைக்கும் இந்நாவல், கத்யானா அமரசிங்கவின் படைப்புலகில் இன்னொரு முக்கியச் சேர்க்கையாகக் கருதப்படுகிறது.
“யாத்திரிகா” வெளியீடாக வரும் நாவல் வெளியீட்டில் இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.