பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைச் சிரேஷ்ட விரிவுரையாளரும் கவிஞருமான கலாநிதி செ.சுதர்சனின் காலிமுகம் 22 கவிதை நூல் வெளியீடு விழா நாளை 23.11.2022 அன்று புதன் பிற்பகல் 3.00 மணிக்குப் பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீடக் கருத்தரங்க மண்டபத்தில் தமிழ்ப் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் தலைமையில் மிகச் சிறப்பாக நிகழ்ந்தது.
பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்கள் தலைமை உரையாற்றும்போது, ஆராய்ச்சி என்பது புறநிலை நின்ற ஆய்வு எனவும் படைப்பு என்பது இதயநிலைசார் பகிர்வு எனவும் கூறி, ஆராய்ச்சி வாய்க்கும் லநபருக்குப் படைப்பாற்றல் வாய்ப்பது கடினம் எனவும் படைப்பாற்றல் வாய்க்கும் நபருக்கு ஆராய்ச்சி வாய்ப்பது கடினம் எனவும் கூறி, இரண்டும் ஒருங்கு சேர வாய்த்த பல்கல்லைக்கழக விரிவுரையாளரில் எனது மாணவர் கலாநிதி சுதர்சனும் சுவாமி விபுலானந்தரின் வாரிசாகத் தன்னை நிரூபித்துள்ளதால், கற்பித்த ஆசிரியன் என்ற வகையில் பெருமிதம் கொள்கிறேன் என்றும் கூறி, சுதர்சன் ஈழத்து இலக்கிய வரலாற்றில் நிச்சயம் ஆய்வாலும் படைப்பாலும் தடம் பதிப்பார் எனவும் கூறினார்.
வெளியீட்டுரை நிகழ்த்திய பேராசிரியர் துரை.மனோகரன் சுதர்சனின் ஆய்வுப் பணிகளும் படைப்புப் பணிகளும் சமாந்தரமாகப் பயணிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறி, ஈழத்துப் புதுக்கவிதை வரலாற்றில் தன்னைத் தக்க ஆளுமையாக அவர் நிலைநிறுத்தியுள்ளார் என்றார்.
தமிழ்த்துறையின் உதவி விரிவுரையாளர் திரு. வி. விமலாதித்தன் நயப்புரை நிகழ்த்தும்போது, சுதர்சன் நம் காலத்தின் கவி ஆளுமை, எங்கள் வாழ்வைப் பாடும் கவிஞன் என்று கூறி, காலிமுகம் 22 என்ற தொகுப்பு இலக்கிய வரலாற்றுக்குப் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சுதர்சன் மூலமாக வழங்கிய நன்கொடை என்றார். சுதர்சனின் இந்தக் கவிதைகள் ஆசியாவின் பெரும் எழுச்சியான காலிமுகத் திடல் போராட்டத்தின் காலத்தால் அழியாத இலக்கிய வடிவங்கள், கவிதைச் சாட்சிகள் என்றார்.
கவிஞர் செ. சுதர்சன் தனது ஏற்புரை நிகழ்த்தினார். நிகழ்வைத் தமிழ்த்துறை விரிவுரையாளர் திருமதி ஆன் யாழினி சதீஸ்வரன் ஒருங்கிணைத்து வழங்கினார்.