வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் கருத்துக்களும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் மீண்டுமொரு அழிவை கொண்டு வருவதற்கான சமிக்ஞையாகவே தென்படுகிறது. எனவே புலிகள் இயக்கத்தால் செய்ய முடியாது போனவற்றை செய்ய முயலும் பிரபாகரனின் ஆவியே விக்னேஸ்வரன் என்று பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
வட மாகாண மக்கள் முறையான அடிப்படை வசதிகளின்றி பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள். அவர்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைத்து அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டிய பொறுப்பு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உண்டு. அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனியான விமான சேவை மற்றும் கப்பல் சேவைகளை பற்றி பேசுவதானது, மீண்டும் பிரிவினைவாதத்திற்கே வழிகோலும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பலாலி திருகோணமலையிலிருந்து இந்தியாவிற்கு விமான சேவையை ஆரம்பிப்பதுடன் காங்கேசன்துறைதறைமுகத்தை வர்த்தகத் துறைமுகமாக்க வேண்டுமென்னும் பிரேரணை வட மாகாண சபையில் அண்மையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அத்துடன் வட மாகாண சபைக்கு விமான சேவை மற்றும் கப்பல் சேவை தொடர்பாக எந்தவிதத் தீர்மானத்தையும் மேற்கொள்ளும் அதிகாரம் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வட மாகாணத்திலிருந்து இந்தியாவுக்கு நேரடி விமான மற்றும் கப்பல் சேவையினை ஏற்படுத்துவது தொடர்பான கோரிக்கை குறித்து பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.