இலங்கை மீது மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை விடுத்துள்ள பலமான புதிய அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்த சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் நியாயம் வேண்டி நிற்பது வெட்கப்பட வேண்டிய செயல் என சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்திய தலைமை நிர்வாகி ஆனந்த பத்மநாபன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்தி நவிபிள்ளை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை முக்கியமானதும் அவசர மற்றும் கசப்பான நினைவூட்டலுமாகும். இனியும் விசாரணையில் தாமதிக்க முடியாது.
மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வ தேசம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு செவிசாய்க்காது சர்வதேசத்தின் கண்ணில் மண்ணை தூவும் நடவடிக்கையில் இலங்கை ஈடுபட்டு வருகின்றது.
எனவே நவிபிள்ளையின் புதிய அறிக்கை ஒரு கண் திறப்பாக இருக்க வேண்டும், இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தும் வலுவான பிரேரணை ஒன்றை ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்ற வேண்டும்.
நவிபிள்ளையின் கண்டுபிடிப்புகள் எங்களது கருத்துகளுடன் ஒத்துப்போகின்றன. இலங்கையில் இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் குறித்து எமக்கு இன்னும் ஆதாரம் கிடைத்த வண்ணமுள்ளன என்றார்.