பெரும்பான்மையை பயன்படுத்தி பிரதமர் மோடியின் அரசு மதவெறியையே ஏற்படுத்தி வருகிறது என ஜப்பானைச் சேர்ந்த பொருளாதார பத்திரிகை கட்டுரை தீட்டியுள்ளது.
தேர்தல்களில் வெற்றி பெறும் பிரதமர் மோடி, இந்தியாவின் பொருளாதாரத்தை செயலிழக்கச் செய்துவிட்டார் என ஜப்பானின் Nikkei Asian Review என்ற பொருளாதாரப் பத்திரிகை முகப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்று (மார்ச் 11) வெளியான அப்பத்திரிகையின் முகப்புக் கட்டுரையில், 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும், குஜராத் மாநிலத்தில் ஏற்படுத்திய பொருளாதார முன்னேற்றத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தப் போவதாக வாக்குறுதி அளித்தார்.
இதனால் பல நெருக்கடிகள் ஏற்பட்டபோதும், 2019-ம் ஆண்டு நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எனக் குறிப்பிட்டதோடு, பொருளாதார வளர்ச்சிக்கு மாறாக ஆயிரத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்ட குஜராத் மதக்கலவரத்தை மீண்டும் செயல்படுத்த மோடி தொடங்கி விட்டதாகவும் அந்தக் கட்டுரையில் சாடப்பட்டுள்ளது.
இதற்காக, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிப்பு, இஸ்லாமியர்களை பாகுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக இந்தியாவின் அனைத்து நகரங்களும் போராட்டக்களங்களாக மாறி உள்ளதையும் Nikkei Asian Review சுட்டிக்காட்டி உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால், இந்தியாவின் பொருளாதாரத்தை பிரதமர் மோடி செயலிழக்கச் செய்துவிட்டார் எனவும் அந்தப் பொருளாதாரப் பத்திரிகை குற்றஞ்சாட்டியுள்ளது.