அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், குறுகிய தொலைபேசி உரையாடலின் போது, பிரித்தானிய மூன்றாம் சார்லஸ் மன்னர் குறித்து பாராட்டுக்களை வெளிப்படுத்தியதோடு, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார்.
இந்த ஐந்து நிமிட உரையாடல், மன்னர் சார்ல்ஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோரின் அமெரிக்க அரச விஜயம் தொடர்பான விவரங்களை பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்த பின்னர் இடம்பெற்றது.
உரையாடலின் போது, மன்னர் சார்ல்ஸை பற்றி அவர் மிகுந்த பாராட்டுக்களுடன் பேசியிருந்தாலும், பிரித்தானிய அரசாங்கத்தைப் பற்றிக் கூறும் போது அவரது குரலும் அணுகுமுறையும் முற்றிலும் மாறியது. குறிப்பாக, பிரதமர்கெய்ர் ஸ்டார்மர் தலைமையின்மீது அவர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
அவரது கருத்துகள் மன்னரின் விஜயத்திற்கு சிக்கலை ஏற்படுத்துமா என்ற கேள்வியை அவர் நிராகரித்தார். பிரித்தானிய அரச குடும்பத்தையும் அரசியல் தலைவர்களையும் தனித்தனியாகவே அவர் பார்க்கிறார் என்பதும் இந்த உரையாடலில் தெளிவானது.
மேலும், இந்த விஜயம் பிரித்தானிய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் அறியாமல் இருந்ததாகவும் தெரியவந்தது.
செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில் நடைபெற்ற இந்த உரையாடல் முன்கூட்டியே திட்டமிடப்படாத ஒன்றாகும். பத்திரிகையாளர்களுடன் இவ்வாறான தன்னிச்சையான தொடர்பு வைத்திருப்பது ட்ரம்பின் தனித்துவமான நடைமுறையாகக் கருதப்படுகிறது.
தொலைபேசியை எடுத்தபின் குறுகிய நேரம் பேச ஒப்புக்கொண்ட அவர், தனது கருத்துகளை மேற்கோள் காட்ட அனுமதி அளித்தாலும், அந்த உரையாடல் பதிவு ஒளிபரப்பப்படக்கூடாது என நிபந்தனை விதித்திருந்தார்.