சுவிட்ஸர்லாந்தின் லௌசேன் பொன்டெய்ஸ் ஒலிம்பிக் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வண்டா டயமண்ட் லீக் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க பத்திரகே முதலாம் இடத்தைப் பெற்று சரித்திரம் படைத்தார்.
இதன் மூலம் டயமண்ட் லீக் தொடர் ஈட்டி எறிதலில் மூன்றாவது வெற்றியை அவர் பதிவுசெய்தார்.

லௌசேன் போட்டியில் தனது மூன்றாவது முயற்சியில் 88.14 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்ததன் மூலம் ருமேஷ் தரங்க வெற்றிபெற்றார்.
முதலாவது சுற்றில் 85.99 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்ததன் மூலம் ருமேஷ் தரங்க முதலிடத்தைப் பெற்றார்.
ஆனால், இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் நிராஜ் சொப்ரா ஈட்டியை 88.05 மீற்றர் தூரத்திற்கு எறிந்து முதலிடத்துக்கு முன்னேறினார்.
ருமேஷ் தரங்க இரண்டாவது முயற்சியில் 87.06 மீற்றர் தூரத்தையே பதிவுசெய்தார்.
எனினும் 3ஆவது முயற்சியில் 88.14 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து ருமேஷ் தரங்க முதலிடத்துக்கு முன்னேறினார்.
அவரது நான்காவது முயற்சி 86.71 மீற்றர் தூரத்தைக் கொண்டிருந்ததுடன் 5ஆவது மற்றும் 6ஆவது முயற்சிகள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது.
நீராஜ் சொப்ராவின் 3ஆவது முயற்சி தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
நீராஜ் சொப்ராவின் 2ஆவது முயற்சியில் பதிவான 88.05 மீற்றர் அவருக்கு இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொடுத்தது.
க்றனேடா விரர் அண்டர்சன் பீட்டர்ஸ் தனது கடைசி முயற்சியில் ஈட்டியை 86.69 மீற்றர் தூரத்திற்கு எறிந்து மூன்றாம் இடத்தைப் பெற்றார்.
இந்த வருட டயமண்ட் லீக் தொடரில் ரபாட் டயமண்ட் லீக்கில் (85.97 மீற்றர்) இரண்டாம் இடத்தைப் பெற்ற ருமேஷ் தரங்க ரோமாபுரி டயமண்ட் லீக்கில் (92.62 மீற்றர்) தேசிய சாதனையுடன் முதலாம் இடத்தையும் தோஹா டயமண்ட் லீக்கில் (88.68 மீற்றர்)முதலாம் இடதையும் பெற்றார்.