ஒளிப்படம்-tharmapalan tilaxan

2013இல் இலங்கைத் தீவிலிருந்து மூன்று இனங்களையும் சேர்ந்த மூவரை தெரிந்தெடுத்து அமெரிக்க உள்துறை அமைச்சு தந்திரோபாய கற்கைகள் தொடர்பாக ஒரு வதிவிடப் பயிற்சியை வழங்கியது. இப்பயிற்சியில் கலந்து கொண்ட ஒரிளம் தமிழ்ப் புலமையாளர் தன் அனுபவத்தை பின்வருமாறு சொன்னார்…… பயிற்சியின்போது தான் அப்போது அமெரிக்காவின் செனட்டராக இருந்த ஜோன் கெரி உடன் நெருங்கி பழகக்கூடியதாக இருந்ததாம். ஜோன் கெரி மிகவும் இயல்பாகவும் எடுப்பில்லாமலும் பழகுவாராம். அவர் ஓய்வாக இருக்கும் வேளைகளில் இந்த இளைஞனை அழைத்துக் கதைப்பாராம்.

இப்படித்தான் ஒருநாள் ஜோன் கெரி இந்த தமிழ் இளைஞரை தன்னுடைய இடத்துக்கு வருமாறு அழைத்திருக்கிறார். இருவரும் நடந்து சென்று ஓர் இடத்தை அடைந்திருக்கிறார்கள்.அது அமெரிக்க படை வீரர்களுக்கான நினைவிடம். அங்கே வெளிநாடுகளில் போர் புரிந்து உயிரிழந்த அமெரிக்கப் படை வீரர்களின் கல்லறைகள் பல காணப்பட்டனவாம். அக் கல்லறைகளைச் சுட்டிக்காட்டிய கெரி இந்த இளைஞரை திரும்பிப் பார்த்து பின்வரும் தொனிப்பட கேட்டாராம்…..
“இக் கல்லறைகளை பார்க்கும் பொழுது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? அமெரிக்கா தன்னுடையது அல்லாத ஒரு யுத்தத்தில் வீணாகத் தனது படை வீரர்களை பலியிடுகிறது என்று தோன்றுகிறதா? யாருடையதோ சண்டையில் அமெரிக்கா தலையிட்டு தன் வீரர்களை வீணாக இழக்கிறது என்று உங்களுக்கு தோன்றுகிறதா ?”என்று.

இக்கேள்விக்கு மேற்படி தமிழ் இளைஞர் ஆம் அப்படித்தான் தோன்றுகிறது என்ற தொனிப்பட பதில் கூறியிருக்கிறார். அவருடைய பதிலை கேட்டு விட்டு ஜோன் கெரி பின்வரும் தொனிப்பட கூறினாராம். “இல்லை அமெரிக்கா தான் சம்பந்தப்படாத யுத்தங்களில் வீணாக தனது படை வீரர்களை பலியிடவில்லை. மாறாக அமெரிக்கா 500 ஆண்டுகளுக்கு பின்னரான உலகத்தைப் பற்றி சிந்திக்கிறது. அமெரிக்காவை போன்று ஒரு பெரிய தேசம் அப்படித்தான் சிந்திக்க முடியும். ஐநூறு ஆண்டுகளுக்குப் பின் அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் உலகத்தை எப்படி தனக்கு ஏற்றாற்போல வடிவமைத்துக் கொள்ளலாம் என்றுதான் சிந்திக்கும். அப்படிச் சிந்தித்துத்தான் அமெரிக்கா இப்பொழுது நாட்டுக்கு வெளியே போரில் ஈடுபடத் தனது படைவீரர்களை அனுப்பி கொண்டிருக்கிறது. மூலோபாய சிந்தனை என்பது இதுதான். ஒரு நாடு அதன் எதிர்காலத்தைக் குறித்து தீர்க்கதரிசனமாக சிந்தித்து இப்பொழுதே அதற்கு வேண்டிய அடிப்படைகளை பலப்படுத்துவது”

ஜோன் கெரி பின்னாளில் அமெரிக்காவின் இராஜாங்கச் செயலராக நியமிக்கப்பட்டார். அவரிடம் பயிற்சிக்கு சென்ற மேற்படி தமிழ் இளைஞர் அதன்பின் கனடாவுக்கு புலம் பெயர்ந்து விட்டார். இப்பொழுது கனடாவில் ஒரு புலமையாளராக இருக்கிறார். அடுத்தடுத்த ஆண்டுகளில் அமெரிக்கா இவ்வாறு மூலோபாயக் கற்கைகளுக்காக இலங்கையிலிருந்து ஆட்களை அழைப்பதை நிறுத்திவிட்டது. ஏனெனில் அந்த பயிற்சியில் இருந்து இலங்கையர்கள் போதிய அளவு கற்றுக் கொள்ளவில்லை என்று அவர்கள் கருதியிருக்கலாம். அந்த பயிற்சியை இலங்கையர்கள் பொருத்தமான விதங்களில் பயன்படுத்தவில்லை என்றும் அவர்கள் கருதியிருக்கலாம்.

உண்மைதான் ஒரு மக்கள் கூட்டத்தின் ஆயிரம் ஆண்டுகால எதிர்காலத்தைக் குறித்து அல்லது 500 ஆண்டுகால எதிர்காலத்தைக் குறித்து அல்லது குறைந்தது நூறாண்டு கால எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திக்கும் தலைவர்கள் எவரையுமே இப்பொழுது அரங்கில் காண முடியவில்லை.

இவ்வாறு அரசியலை ஆயிரம் ஆண்டுகால நோக்கில் அல்லது அல்லது நூறாண்டு கால நோக்கில் அல்லது ஆகக்குறைந்தது ஒரு தலைமுறையின் நோக்கிலாவது சிந்திப்பது என்பது முழுக்க முழுக்க அறிவுபூர்வமானது. அவ்வாறு திட்டமிடுவதற்கு ஆராய்ச்சி மையங்களும் சிந்தனைக் குழாம்களும் தேவை. இல்லையென்றால் அரசியலை அதிகபட்சம் அறிவுபூர்வமானதாக மாற்ற முடியாது.

இலங்கை தீவில் சிங்கள மக்கள் ஓர் அரசுடைய தரப்பு. எனவே அவர்களுக்கு நிறுவனப் பலம் உண்டு. போதிய கட்டமைப்புக்கள் உண்டு. அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுகளுக்கூடாக அவர்கள் தங்களைப் பலப்படுத்திக் கொள்வார்கள். எனவே அரசுடைய தரப்பு என்ற காரணத்தால் சிங்கள மக்களிடம் மூலோபாய ஆராய்ச்சிகளுக்கும் தந்திரோபாய ஆராய்ச்சிகளுக்கும் போதிய வளம் உண்டு. நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பலமான கட்டமைப்புக்கள் உண்டு.

தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை அவர்கள் நீண்டகால நோக்கில் திட்டமிட்டுக் முன்னெடுக்கிறார்கள். அங்கே இனவாதம் நன்கு நிறுவனமயப்பட்டுள்ளது. உதாரணமாக, சிங்களக் குடியேற்றங்கள் மூலம் தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பது, குடித்தொகையை நீர்த்துப் போகச் செய்வது. சிங்கள பௌத்த மயமாக்கலை செய்வது, வடக்கு கிழக்கைப்பிரிப்பது போன்ற எல்லா விடயங்களிலும் அவர்களிடம் மிக நீண்டகால நோக்கிலான திட்டங்கள் உண்டு. அவ்வாறு திட்டங்களை வகுத்துக் கொடுக்க தேவையான மூலோபாய ஆராய்ச்சி நிறுவனங்களும் தந்திரோபாய ஆராய்ச்சி நிறுவனங்களும் அவர்களிடம் உண்டு.

ஆனால் அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்களோ மையம் சிதறிக் காணப்படுகிறார்கள். ஒருபுறம் கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியல் சுலோகங்களின் கீழ் இணக்க அரசியலை செய்கிறது. இன்னொரு புறம், கூட்டமைப்புச் செய்வது பிழைத்து என்று கூறும் தரப்புகள் தங்களுக்கிடையே ஐக்கியப்பட முடியாதவைகளாகக் காணப்படுகின்றன. மேற்படி தரப்புகளை ஒன்றிணைக்கும் ஓர் இடையூடாட்டத் தளமாகக் காணப்பட்ட பேரவையும் நலிந்து செல்கிறது.

இப்படிப்பட்டதோர் துர்ப்பாக்கியச் சூழலில்தான் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வர இருக்கிறது. இனிவரும் காலம் ஒரு தேர்தல் காலம். தமிழ் மக்களிடம் இப்பொழுது ஆயுத போராட்டம் இல்லை. பலமான மக்கள் அமைப்பும் இல்லை. பேரவை ஒருநாள் எழுக தமிழை நடத்தி முடிப்பதற்கே கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது. இந்நிலையில் வெகுஜனக் கிளர்ச்சிகளின் மூலம் மக்கள் அதிகாரத்தை தம் கையில் எடுத்துக்கொண்டு மூலோபாய ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் அரசியலைத் திட்டமிடவல்ல எந்த ஒரு மக்கள் அமைப்பும் தமிழ் மக்கள் மத்தியில் கிடையாது.

இருப்பதெல்லாம் தேர்தல் மையக் கட்சிகள்தான். அப்படியென்றால் மக்கள் அதிகாரத்தை தேர்தல் மூலம்தான் பெறலாம். அவ்வாறு மக்கள் அதிகாரத்தை தேர்தல் மூலம் பெறுவது என்றால் சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கிடையே வெற்றியை மையமாகக் கொண்ட ஒரு பலமான கூட்டு உருவாக்கப்பட வேண்டும். அது ஒரு தந்திரோபாய கூட்டாகக்கூட இருக்கலாம். எப்பொழுதும் கூட்டுக்கள் தந்திரோபாயமானவை. அப்படி ஒரு கூட்டை உருவாக்கி மக்கள் அதிகாரத்தைப் பெறும் ஓர் அமைப்பு அல்லது கட்சி அடுத்த கட்டமாக மூலோபாய ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் தேர்தல்களை எதிர்கொள்ளலாம்.

வரும்  ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எடுக்கப் போகும் முடிவு முக்கியமானது. ஏனெனில் இந்தோபசுபிக் முலோபாயத்தைப் பொறுத்தவரை இப்பிராந்தியத்தில் தமிழ் மக்களின் பாத்திரம் மிகவும் நிர்ணயகரமானது. தமிழ்மக்களின் வகிபாகம் கேந்திர முக்கியத்துவம் மிக்கது. அதாவது கேந்திர முக்கியத்துவம் மிக்க வாக்குகளை பெற்ற ஒரு மக்கள் கூட்டமே தமிழர்கள். ஆனால் தமது வாக்குகளின் கேந்திர முக்கியத்துவத்தை அவர்கள் போதிய அளவுக்கு விளங்கியிருப்பதாகத் தெரியவில்லை. அவர்களுடைய தலைவர்களில் பலருக்கும் அந்த முக்கியத்துவம் விளங்கியிருப்பதாக தெரியவில்லை.

கடந்த 15 ஆண்டுகால கட்டத்துக்குள் ஜனாதிபதி தேர்தல்களை தமிழ் தரப்பு எவ்வாறு கையாண்டிருக்கிறது என்பதை குறித்து ஒரு தொகுக்கப்பட்ட ஆய்வு அவசியம்.

2005ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் ஜனாதிபதி தேர்தலில் நன்கு திட்டமிட்டு ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்தது. 2010இல் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி மஹிந்தவை தோற்கடிக்க முயற்சித்தது. ஆனால் தோற்றுவிட்டது. 2015இல் மேற்கு நாடுகளும் இந்தியாவும் ரணில் – மைத்திரி- -சந்திரிகா- கூட்டமைப்பு- முஸ்லிம்கள் ஆகிய தரப்புகளை இணைத்து மகிந்தவுக்கு எதிராக நிறுத்தி வெற்றிகரமாக மஹிந்தவை தோற்கடித்தன.

இதில் 2005 ஆம் ஆண்டு புலிகள் இயக்கம் ரணிலை தோற்கடித்த பொழுது அவர்களிடம் தெளிவான வழி வரைபடம் இருந்தது. அந்த வழி வரைபடம் சரியா பிழையா என்பதைத் தனியாக விவாதிக்க வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ராணுவத் தந்திரோபாயத்திற்குரிய வழி வரைபடம் அது. ரணில் கொண்டு வந்த சமாதானம் ஒரு பொறி என்று அந்த இயக்கம் கருதியது. எனவே அவரை தோற்கடிப்பதன் மூலம் அந்தப் பொறியை உடைத்துக் கொண்டு வெளியே வரலாம் என்று அந்த இயக்கம் நம்பியது. போரில் புதிய பிரதேசங்களை விடுவித்து அதன் மூலம் நமது பேரத்தை அதிகப்படுத்தலாம் என்றும் அந்த அமைப்பு நம்பியது. அதேசமயம் கடும்போக்குடைய மஹிந்த ராஜபக்சவை ஆட்சியில் அமர்த்துவது மூலம் அவர் ஒடுக்குமுறையை தீவிரப் படுத்துவார். இது அனைத்துலக அளவில் தமிழ் மக்களின் போராட்ட நியாயத்துக்கான அங்கீகாரத்தை அதிகப்படுத்தும் என்றும் அந்த இயக்கம் நம்பியது. ஆனால் விடுதலைப் புலிகளின் இந்த தந்திரோபாயம் வெற்றி பெறவில்லை. மாறாக அது அந்த இயக்கத்தை தோற்கடிப்பதில் முடிந்தது.

அதன்பின் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவோடு வெளிப்படையாக கூட்டுச் சேர்ந்தது. அதுவும் சரத் பொன்சேகாவின் தோல்விக்கு ஒரு காரணம். பொன்சேகாவை முன்னிறுத்தியது என்பது மேற்கு நாடுகளின் ஒரு வியூகம்தான். அந்த வியூகத்தின் ஒரு கருவியாக கூட்டமைப்பு தொழிற்பட்டது. ஆனால் அந்த வியூகம் வெற்றி பெறவில்லை.

ஆனால் 2015 மேற்கு நாடுகள் மற்றும் இந்தியாவின் வியூகம் வெற்றி பெற்றது. ரணில் மைத்திரி கூட்டு மஹிந்தவை தோற்கடித்தது. இதிலும் கூட்டமைப்பு ஒரு கருவிதான். வியூகம் மேற்கு நாடுகள் வகுத்ததுதான். எனினும் அந்த வியூகத்தை கடந்த ஒக்டோபர் மாதம் மஹிந்த முறியடித்து விட்டார். ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட வலுச் சமநிலை இப்பொழுது குழம்பி விட்டது. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் மற்றொரு ஜனாதிபதி தேர்தல் வருகிறது.

கடந்த 15 ஆண்டு கால கட்டத்துக்குள் தமிழ்தரப்பு முன்னெடுத்த தந்திரோபாயங்களை தொகுத்துப் பார்த்தால் விடுதலைப் புலிகள் இயக்கம் சொந்தமாக ஒரு முடிவை எடுத்தது. அது மேற்கு நாடுகளின் கருவியாக தொழிற்பட மறுத்தது. எனவே தோற்கடிக்கப்பட்டது.

ஆனால் கூட்டமைப்பு கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் மேற்கு நாடுகளின் கருவியாக தொழிற்பட்டது அதனால் பெற்றது என்ன? ஆயுதப் போராட்டத்தை அழிக்க உதவிய மேற்கு நாடுகளும் இந்தியாவும் ஒரு தீர்வை தர மறுக்கும் அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்று இப்போது சம்பந்தர் கேட்கிறார்.

ஒளிப்படம்-tharmapalan tilaxan

இப்படிப்பார்த்தால் கடந்த 15ஆண்டு காலகட்டத்துக்குள் நடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் தமிழ் மக்களின் தந்திரோபாயம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இது தொடர்பில் முழுமையான தொகுக்கப்பட்ட ஓர் ஆய்வு அவசியம். அந்த ஆய்வு முடிவின் அடிப்படையில் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலை குறித்து ஒரு புதிய தந்திரோபாயம் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலின் போது மட்டும் அல்ல மாகாணசபைத் தேர்தல், பொதுத் தேர்தல் எல்லாவற்றின் போதும் பொருத்தமான, தீர்க்கதரிசனம் மிக்க, துணிச்சலான தந்திரோபாயங்களை கண்டுபிடிக்க வேண்டும். யார் கண்டுபிடிப்பது?

ஜனாதிபதித் தேர்தலை அதற்குரிய தந்திரோபாயத்துடன் அணுக எத்தனை கட்சிகள் தயார்? அதற்காக நீண்டகால நோக்கில் எந்தக் கட்சியாவது திட்டமிட்டதா ? கடந்த சில வாரங்களாக ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு என்ன நடந்தது? தமிழ்ப் பேரத்தை உயர்த்தும் விதத்தில் தேர்தலுக்கான தந்திரோபாயத்தை யார் வகுப்பது?
தமிழ் மக்களின் எதிர்காலத்தை ஆயிரம் ஆண்டுகால நோக்கில் அல்லது 500 ஆண்டுகால நோக்கில் அல்லது குறைந்தது ஜந்தாண்டு கால நோக்கிலாவது சிந்தித்து திட்டமிடவல்ல கட்சி எது? தலைவர் யார்?