அமெரிக்க ஊடக நிறுவனங்களான CNN, MS NOW மற்றும் Politico ஆகியவற்றுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
தனது ஆட்சிக்காலம் குறித்து இந்த ஊடகங்கள் பொய்களையும் கற்பனைகளையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதாகக் குற்றம் சாட்டி, தனது ‘Truth Social’ சமூக வலைத்தளப் பதிவின் ஊடாக அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எனினும், தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக எவ்வித குறிப்பிட்ட தகவல்களையும் அவர் முன்வைக்கவில்லை.
இந்தத் தடை உத்தரவு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்தோ அல்லது குறித்த நிறுவனங்களின் ஊடகவியலாளர்கள் வெள்ளை மாளிகை வளாகத்துக்குள் நுழைவது முற்றாகத் தடுக்கப்படுமா என்பது குறித்தோ இதுவரை தெளிவான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நடவடிக்கை அமெரிக்க ஊடக அமைப்புகள் மற்றும் சட்ட வல்லுநர்களிடையே கடும் விமர்சனங்களை உருவாக்கக்கூடும் எனவும், இதற்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் இந்த முடிவைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள CNN அலைவரிசை, இது அமெரிக்க ஊடக சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட சட்டவிரோதத் தாக்குதலாகும் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், வெள்ளை மாளிகை ஊடகக் குழுவின் நியாயமான மற்றும் சரியான செய்தி அறிக்கையிடலுக்குத் தாம் எப்போதும் துணை நிற்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.