ஆஸ்திரேலியாவின் நவுருத்தீவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மிலேச்சத்தனமான தாக்குதல்
நவுருத்தீவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியான ராஜேஷ்குமார் ராஜகோபால் என்பவர் மீது 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராஜகோபால், சைக்கிளில் தனியாக பயணித்த போது, பின்னே வந்த கார் அவர் மீது வேண்டுமென்றே மோதியுள்ளது. அத்துடன், அந்த கார் பின்னே சென்று மீண்டும் தன் மீது மோதி தன்னை இழுத்துச் சென்றதாக ராஜகோபால் கூறியுள்ளார்.
நவுரு உள்ளூர்வாசிகளால் அகதிகள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகின்றது.
12,500 மக்கள் தொகை கொண்ட நவுருத்தீவில் ஐந்தில் ஒருவர் வேலையற்றவராக இருப்பதாகவும் அதில் சிலர், அகதிகளுக்கு உணவுக்கும் வேலைக்கும் எனக் கொடுக்கும் பணத்தை பிரச்சினையாக பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.
அகதிகளை பாதுகாக்க ஆஸி. அரசு தவறிவிட்டது
இந்நிலையில், ஆஸ்திரேலிய அரசு தங்களைப் பாதுகாக்க தவறிவிட்டதாக ராஜகோபால் சாடியுள்ளார். அத்துடன், ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
குறித்த சம்பவத்தால் ராஜேஷ்குமார் நிரந்தரமாக முடங்கியுள்ளார். கடந்த பல மாதங்களில் ராஜகோபாலுக்கு 19 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது ஆஸ்திரேலியாவில் சமூகத் தடுப்பில் உள்ள அவர் மீண்டும் நடக்க பயின்று வருகிறார்.
ஆனால், படகு வழியாக வருபவர்களை ஏற்க முடியாது என்ற கடுமையான கொள்கையால் ஆஸ்திரேலியாவில் வசிப்பதற்கான அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த ராஜகோபால்?
கொழும்பில் பிறந்த ராஜகோபால், இலங்கையில் நிகழ்ந்த போரில் தன்னுடைய 9 உறவினர்களை இழந்துள்ளார். இலங்கை அரசு படைகள் நடத்திய தாக்குதலின் போது காயமுற்ற அவர், அரசு படைகளிடம் சரணடைந்த நிலையில், அவருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளதாக மூன்றாண்டுகள் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
2011, செப்டெம்பர் மாதம் வவுனியா – ஓமந்தை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், இந்தியாவுக்கு தப்பி, அங்கிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயன்றிருக்கின்றார். ஆஸ்திரேலிய படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டு, நவுருத்தீவு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட ராஜகோபால், அங்கு 7 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ராஜகோபாலுக்கு ஆஸ்திரேலியா நிரந்தர பாதுகாப்பை வழங்க வேண்டும் என ஆஸி. சுதந்திர நாடாளுமன்ற உறுப்பினரான மோனிக்யூ ரைன் கேட்டுக்கொண்டுள்ளார்.