அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான ஜில் பிடன் கொவிட்19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.
“நேற்று மாலை, முதல் பெண்மணிக்கு கொவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அவர் தற்போது டெலாவேரில் உள்ள ரெஹோபோத் கடற்கரையில் இருக்கும் தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.” என, ஜில் பிடன் செய்தித் தொடர்பாளர் எலிசபெத் அலெக்சாண்டர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
அவரது மனைவி ஜில் பிடனுக்கு கொவிட் தொற்று இருந்தபோதிலும், ஜி-20 மாநாட்டின் அட்டவணையின்படி, ஜனாதிபதி ஜோ பிடன் இந்தியா வருவார். திட்டமிட்டபடி மாநாட்டில் கலந்துகொள்வார் என வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடன் செப்டெம்பர் 7ஆம் திகதி இந்தியா செல்கிறார். செப்டெம்பர் 8 ஆம் திகதி புதுடெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டையொட்டி அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு சந்திப்பையும் நடத்துகிறார்.
செப்டெம்பர் 9ஆம் திகதி ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜோ பிடன் தூய்மையான எரிசக்தி மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவார்.