அமெரிக்க – உக்ரைன் ஜனாதிபதிகளின் விசேட சந்திப்பு, வெள்ளை மாளிகையில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.
கடந்த முறை நடைபெற்ற இவர்களின் சந்திப்பு, சர்ச்சையில் முடிந்தமையால் இரண்டவாது முறையாக நடைபெற்ற நேற்றைய சந்திப்பு முழு உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குறிப்பாக, உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் ஆடை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் அதிகாரபூர்வ சந்திப்புகளில் அணியும் உடையில் இருந்தார்.
“என்னால் நம்ப முடியவில்லை. உங்கள் ஆடை அவ்வளவு அழகு,” என அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் புகழ்ந்துள்ளார்.
அத்துடன், “உங்களுக்கு இந்த ஆடை மிகவும் நன்றாக இருக்கிறது,” என அமெரிக்க மூத்த ஊடகவியலாளரான பிரயன் க்ளென் கூறியுள்ளார்.
அதற்கு “இதுவே என்னிடமிருந்த சிறந்த ஆடை,” என்று சிரித்துக்கொண்டே ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
இதற்குக் காரணம், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிப்ரவரியில் வெள்ளை மாளிகையில் இருவரும் சந்தித்தபோது ஸெலென்ஸ்கி அணிந்திருந்த டி சட்டையைப் பற்றி பிரயன் க்ளென் குறைகூறினார்.
“உயர் சந்திப்பு நடக்கும் வெள்ளை மாளிகைக்கு வரும்போது கோட் அணிந்துவராதது ஏன்? ” என்று அவர் வினவினார்.
ஸெலென்ஸ்கியிடம் சந்திப்புகளில் அணியும் அத்தகைய உடை இல்லையா என்று கேட்ட அவர், உக்ரேனிய ஜனாதிபதி வெள்ளை மாளிகையை மதிக்கவில்லை என்று அமெரிக்கர்கள் பலர் நினைப்பதாகத் தெரிவித்தார்.
காரசாரமாக நடந்த அந்த முதல் சந்திப்பு தோல்வியில் முடிந்தது. இம்முறை ஆடை மாறியது… சந்திப்பும் இனிமையாக அமைந்ததாக அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.