அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் போராட்டங்களும் வெடித்துள்ளன.
இந்நிலையில், டிரம்ப்பின் வருகைக்காக, அரச முடிசூட்டு விழாவுக்குப் பின்னர் மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கை இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு, வின்ட்சர் கோட்டையின் சுவர்களில் டிரம்ப் மற்றும் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆகியோரின் படங்கள் திட்டமிட்டு, ஒளிரச் செய்யப்பட்டன.
வின்ட்சரில் டிரம்ப்பின் வருகைக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு, “டொனால்ட் டிரம்ப் இங்கு வரவேற்கப்படவில்லை” என்று முழக்கமிட்டனர்.
இன்று புதன்கிழமை மத்திய இலண்டனில் 50 தொழிற்சங்கங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய Stop Trump Coalition ஒரு தேசியப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
தேம்ஸ் நதியில் பொலிஸாரின் படகுகள், ஸ்னைப்பர்கள் மற்றும் ட்ரோன்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், ட்ரோன் கட்டுப்பாடுகளை மீறியதற்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிரம்ப்பின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ அரச பயணத்தின்போது, பொதுமக்கள் கூடும் நிகழ்வுகள் எதுவும் திட்டமிடப்படவில்லை.
இதேவேளை, டிரம்பின் தாய் மேரி ஆன் மேக்லியோட் டிரம்ப், ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். மேலும், டிரம்ப் ஸ்காட்லாந்தில் இரண்டு கோல்ஃப் மைதானங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.