ரோலக்ஸ் கடிகார விற்பனையாளரைத் தாக்கி, அவருக்கு காயங்களை ஏற்படுத்திய ஒரு கொள்ளையன், பெருநகர காவல்துறையின் நேரடி முக அடையாளத் தொழில்நுட்பத்தின்உதவியால் பிடிபட்டு, எட்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.
அடெனோலா அகின்டுடைர் என்ற 22 வயதான நபர், மேற்கு லண்டன், ஹேஸ் பகுதியில் ரோலக்ஸ் கடிகாரத்தை விற்க வந்த ஒருவரைத் தாக்கி, அந்தக் கடிகாரத்தைத் திருடியுள்ளார்.
ஜனவரி 10 அன்று நடந்த இந்தச் சம்பவத்தின்போது, நிரந்தர முகவரி இல்லாதவரான அகின்டுடைர், ரோலக்ஸ் வாங்குபவர் போல முகநூல் சந்தையைப் பயன்படுத்தி விற்பனையாளரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். சந்திப்பின்போது, அவர் கத்தியால் தாக்கியதில், 30 வயதுடைய பாதிக்கப்பட்டவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
அகின்டுடைர் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அயர்லாந்திற்கு தப்பிச் சென்றார். மேலும், அவர் டிசம்பர் 2024 இல் மற்றொரு ரோலக்ஸ் கடிகாரத்தைக் கொள்ளையடித்த சம்பவத்துடனும் தொடர்புடையவர் என விசாரணையில் தெரியவந்தது.
தேடப்பட்டு வந்த நிலையில், அகின்டுடைர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்திற்குத் திரும்பி வந்ததாகத் தெரிகிறது.
மெட் பொலிஸார் ஏப்ரல் 15 அன்று ஸ்ட்ராட்ஃபோர்டில் நடத்திய LFR செயல்பாட்டின்போது, அகின்டுடைர் அதனைக் கடந்து சென்றதால், அதிகாரிகளுக்கு எச்சரிக்கை கிடைத்தது.
இந்தத் தொழில்நுட்பம் இல்லாவிட்டால், அகின்டுடைர் தொடர்ந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி, பிடிபடாமல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தியபோது, அவர் போலி அடையாள ஆவணங்களைக் காட்டியதுடன், தமது குரலையும் மாற்றி அதிகாரிகளைத் திசைதிருப்ப முயன்றார். ஆயினும், அதிகாரிகள் அவரது உண்மையான அடையாளத்தை உறுதிப்படுத்த முடிந்தது.
ஐல்வொர்த் க்ரௌன் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். நவம்பர் 5 அன்று, அதே நீதிமன்றத்தில் அவருக்கு எட்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.