2025ஆம் ஆண்டில் இதுவரை இங்கிலாந்தில் 300க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக இங்கிலாந்து புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சராசரியாக நாளொன்றுக்கு ஒரு நிலநடுக்கம் என்ற அளவில் இந்த நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி ஸ்கொட்லாந்தின் லோச் லியோன் பகுதியில் சில மணிநேர இடைவெளியில் 3.7 மற்றும் 3.6 மெக்னிடியூட் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் பதிவானது. இவை 2025ஆம் ஆண்டில் இதுவரை ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களாகக் கருதப்படுகின்றன.
அதேபோல், டிசெம்பர் மாத தொடக்கத்தில் லங்காஷயரில் 3.3 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், அதைத் தொடர்ந்து சில்வர்டேல் பகுதியில் 2.5 மெக்னிடியூட் அளவிலான பின்அதிர்வுகள் உணரப்பட்டன. ஸ்கொட்லாந்தின் ஹைலேண்ட்ஸ், தெற்கு வேல்ஸ், யோர்க்ஷயர் மற்றும் லங்காஷயர் ஆகிய பகுதிகள் நில அதிர்வு அதிகம் பதிவாகும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
“இங்கிலாந்து முழுவதும் உள்ள 80 கண்காணிப்பு நிலையங்கள் மூலம் நில அதிர்வுகள் பதிவு செய்யப்படுகின்றன. பொதுவாக ஆண்டுக்கு 200 முதல் 300 வரை நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம் என்றாலும், 2025ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 309ஐ தாண்டியுள்ளது” என்று நில அதிர்வு நிபுணர் பிரையன் பாப்டி (Brian Baptie) தெரிவித்துள்ளார்.
இதில் 20 முதல் 30 நிலநடுக்கங்களை மட்டுமே பொதுமக்கள் நேரடியாக உணர முடிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 1,320 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இங்கிலாந்து மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுவாக மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு ரிக்டர் அளவுகோலில் ஒரு நிலநடுக்கம் பதிவாகும் என்றும், சில தசாப்தங்களுக்கு ஒருமுறை ஐந்து ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படுவதாகவும் புவியியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான சமீபத்திய நிகழ்வு 2008ஆம் ஆண்டு லிங்கன்ஷையரில் பதிவானது.
மேலும், ஒவ்வொரு சில நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆறு ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நிகழும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் இதுவரை பதிவான மிகப்பெரிய நிலநடுக்கம் 1931ஆம் ஆண்டு யோர்க்ஷயர் கடற்கரைக்கு அருகே, வட கடலில் உள்ள டோகர் வங்கி பகுதியில் ஏற்பட்டதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.