உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிப்பதற்காக, தங்களது சொந்த வான் பாதுகாப்பு கையிருப்புகளைப் பயன்படுத்தியாவது உக்ரைனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என நேச நாடுகளிடம் இங்கிலாந்து பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) வலியுறுத்தியுள்ளார்.
‘விருப்பமுடையோரின் கூட்டமைப்பு’ (Coalition of the Willing) மாநாட்டை இணைத் தலைமை ஏற்று நடத்தும் தனது முதலாவது கூட்டத்தின் தொடக்க உரையிலேயே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
உக்ரைன் மக்களுக்கு எதிராக பலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்ட ஆண்டி பர்ன்ஹாம், இதன் மூலம் வெற்றியைப் பெற முடியும் என ரஷ்யா நம்புவதாகக் கூறினார்.
“இத்தகைய நடவடிக்கைகள் ஒருபோதும் வெற்றிக்கு வழிவகுக்காது என்பதை நாம் ரஷ்யாவுக்கு தெளிவாக உணர்த்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைனை ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்காக, கூட்டணியில் உள்ள நாடுகளுடன் மட்டுமன்றி ஏனைய நேச நாடுகளுடனும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
உக்ரைனுக்குத் தேவையான பாதுகாப்பு உதவிகளை வழங்குவதில் தாமதிக்காமல், தங்களிடம் உள்ள வான் பாதுகாப்பு கையிருப்புகளைப் பயன்படுத்தியாவது சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் கூட்டணி நாடுகளிடம் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, மொஸ்கோ மீது பொருளாதார அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதிகளுக்கு எதிராக கூடுதல் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.