இங்கிலாந்தில் உள்ள ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தை (University of Sheffield) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஷெஃபீல்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உணவு பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வில் ஈடுபட்டனர்.
இதற்காக டிரோசோபிலா மெலனோகாஸ்டர் (Drosophila melanogaster) எனப்படும் பழ ஈக்களை வைத்து ஆய்வு நடத்தினர். அதன்படி பழ ஈக்களுக்கு சில நாட்கள் ஒரே அளவிலான உணவை சாப்பிட அளித்து வந்தனர். சில நாட்கள் கழித்து அவற்றுக்கு கொடுத்து வந்த உணவின் அளவை அதிகரித்தனர்.
உணவு ஒரே அளவில் கொடுக்கப்பட்ட போது பழ ஈக்களின் ஆரோக்கியம் எவ்வாறு இருந்தது, உணவு அளவை அதிகரித்த பின்னர் அவற்றின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பதை கண்காணித்தனர். சீரான அளவில் உணவு சாப்பிட்ட போது அவற்றின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்துள்ளது.
ஆனால் உணவின் அளவை அதிகரித்த பின்னர் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பழ ஈக்களின் ஆரோக்கியத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஈக்கள் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். மேலும் அதிக உணவு கொடுக்கப்பட்ட ஈக்கள் சராசரியைவிட குறைவான முட்டைகளையே இட்டுள்ளன.
இதன் மூலம் உணவு கட்டுப்பாடில் இருந்து விட்டு திடீரென அதை கைவிட்டு அதிக உணவை எடுத்து கொள்வதோ, அல்லது சராசரியான உணவு அளவிலிருந்து சட்டென்று அதிக அளவு உணவை தொடர்ந்து எடுத்து கொள்வதோ உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு கட்டுப்பாடு என்பது ஒரு அசாதாரண முரண்பாடு என்று இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய ஷெஃபீல்டின் பல்கலைக்கழக விலங்கு மற்றும் தாவர அறிவியல் துறையைச் சேர்ந்த பி.எச்.டி மாணவர் ஆண்ட்ரூ மெக்ராக்கன் கூறியுள்ளார்.
அன்றாடம் சராசரியாக ஒரு அளவில் உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, திடீரென அதிக அளவு உணவை எடுத்து கொண்டால் அது ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவு, குறைவான ஆயுட்காலம் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று புதிய ஆராய்ச்சி கூறியுள்ளது.