கடந்த ஓராண்டாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், வெளிநாடுகளில் தஞ்சம் கோருவது, ஏதாவது ஒரு வழியில் வேலை தேடி செல்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோல், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செயல்களும் அரங்கேறி வருகின்றன.
அந்தவகையில், கடந்த ஜனவரி 4 ஆம் திகதி இலங்கை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து நீர்கொழும்பு பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அவ்வாறு மோசடியில் ஈடுபட்டனர் எனச் சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குச் செல்ல ஏற்பாடு செய்து அங்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களிடம் பணம் வசூலித்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
சட்டவிரோதமாகப் புலம்பெயர்வதற்காக 20 பேரிடம் 50 லட்சம் இலங்கை ரூபாவை இவர்கள் வசூலித்திருக்கின்றனர்.
இந்தச் சந்தேகநபர்கள் சிலாபம் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் என இலங்கைக் கடற்படையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இவர்கள் நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.