ஜனசக்தி குழுமத்தின் தலைவரும் பிரபல தமிழ் வர்த்தகருமான தினேஷ் ஷாப்டரின் (வயது 52) படுகொலை தொடர்பில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் பிரைன் தோமஸ் பொலிஸாரின் விசாரணை வலைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.
தினேஷ் ஷாப்டரிடமிருந்து பிரைன் தோமஸ் 138 கோடி ரூபாவைக் கடனாகப் பெற்றுள்ளார். இந்தக் கடனைப் பெறுவதற்காகவே அவர் வீட்டிலிருந்து காரில் புறப்பட்டிருந்தார். இது தொடர்பில், தனது மனைவியிடமும் செயலாளரிடமும் அவர் தெரிவித்தும் இருந்தார்.
இறுதியாக, தினேஷ் ஷாப்டரின் கைத்தொலைபேசியிலிருந்து பிரைன் தோமஸுக்கே அழைப்புச் சென்றுள்ளது. இது தொடர்பிலும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தக் கொலை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை, பிரையன் தோமஸுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையை கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுனவெல விதித்துள்ளார்.
பிரையன் தோமஸிடம் இரண்டு கடவுச்சீட்டுகள் இருக்கின்றன. இந்த இரண்டு கடவுச்சீட்டுகளுக்கும் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தினேஷ் ஷாப்டர் பயன்படுத்திய கையடக்கக் கருவியின் அழைப்பு தொடர்பான தொலைத்தொடர்பு பகுப்பாய்வு அறிக்கையை வழங்க தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு உத்தரவிடுமாறு பொரளைப் பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.
இதற்கு சேவை வழங்குநர்களிடமிருந்து பதிவைப் பெற நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.