வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் முதல் பெண் பிரதமராக 64 வயதான நஜ்லா பவுடன் ரோம்தனே கடந்த 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார்.
துனிசிய தேசிய பல்கலைக் கழகத்தில் புவி அறிவியல் பேராசிரியராக பணிபுரிந்த இவர், பிரான்ஸ் நாட்டின் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
துனிசியாவில் பல்வேறு பேரிடர் தொடர்பான பணிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தார். கல்வி சீர்திருத்த பணிகளில் முக்கிய பங்காற்றினார். அவர் துனிசியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்று, அரசை வழி நடத்தி வந்தார்.
இந்நிலையில், நஜ்லா பவுடனை, பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதாக அந்நாட்டு ஜனாதிபதி கைஸ் சையத் திடீரென்று அறிவித்துள்ளார்.
நஜ்லா பவுடன் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் குறித்து இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.
இதையடுத்து துனிசியாவின் புதிய பிரதமராக அக்மத் ஹச்சானியை ஜனாதிபதி நியமித்தார். அக்மத் ஹச்சானி, துனிசியா மத்திய வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார்.