தாய்லாந்து – கம்போடியா எல்லைப் பகுதியில் மோதல் நிலை ஆரம்பித்துள்ளது. அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
தாய்லாந்தின் டா மோன் தோம் ஆலயத்திற்கு அருகே கம்போடிய இராணுவம் முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தாய்லாந்து இராணுவம் அறிக்கை வெளியிட்டது.
கனரக ஆயுதங்களுடன் கம்போடிய வீரர்கள் அந்தப் பகுதியில் காணப்பட்டதாக தாய்லாந்து தெரிவித்தது.
ஆனால், தாய்லாந்து இராணுவம் எல்லை மீறியதாகவும் கம்போடிய இராணுவம் தற்காத்துக்கொள்ள பதிலடி கொடுத்ததாகவும் கம்போடியத் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
மோதல் நிலையின் ஆரம்பம்
தாய்லாந்து – கம்போடியா சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் தாய்லாந்து இராணுவ வீரர் அண்மையில் கண்ணிவெடியால் காயமுற்றார்.
எல்லைப் பகுதியில் கண்ணிவெடிகள் புதிதாகப் பொருத்தப்பட்டவை என்று கூறித் தாய்லாந்து வெளியுறவு அமைச்சு, கம்போடியாவிடம் முறையான எதிர்ப்பைப் பதிவுசெய்திருக்கிறது.
அதை கம்போடியா மறுத்தது. இதனையடுத்து தாய்லாந்து கம்போடியாவுடனான அதன் அரசந்திர நல்லுறவை உறவை மாற்றியிருக்கிறது.

தூதுவர்கள் மீளப்பெறப்பட்டனர்
கம்போடியாவுக்கான தனது தூதரை மீட்டுக்கொள்வதாக நேற்று புதன்கிழமை (23) தாய்லாந்து அறிவித்தது. கம்போடியாவின் தூதரையும் திருப்பியனுப்பப்போவதாகவும் அது கூறியிருந்தது.
பொதுமக்கள் இருவர் காயம் ; மக்கள் வெளியேற்றம்
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே எல்லைப் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது
கம்போடியாவின் தாக்குதலில் தாய்லாந்தைச் சேர்ந்த பொதுமக்கள் இருவரே உயிரிழந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், இருவர் காயமுற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே, தாய்லாந்தில் 86 கிராமங்களில் வசிக்கும் சுமார் 40,000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நிலைமையை அனைத்துலகச் சட்டத்திற்கேற்ப கையாள வேண்டும் என்று தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் பும்தாம் விசாயசாய் குறிப்பிட்டார்.
போருக்கு தயார் நிலை
கம்போடியாவின் இரு மாநிலங்கள் தாய்லாந்து இராணுவத்தால் தாக்கப்பட்டதாகக் கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹுன் சென் தெரிவித்தார்.
கம்போடியர்கள் அமைதிகாக்குமாறும் இராணுவத்தின் மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
கம்போடியாவில் உள்ள தாய்லந்துக் குடிமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கம்போடியாவிற்கு அவசரமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அங்குள்ள தாய்லாந்து தூதரகம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையே தாய்லந்து இராணுவம் F-16 போர் விமானங்களைத் தயாராக நிறுத்திவைத்துள்ளது.