ரணில் கைது
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணை ஒன்றுக்காக இன்று (22) ஆஜரான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
ஒரு கோடி அறுபத்தொன்பது இலட்சம் ரூபாய் பொது நிதியைப் பயன்படுத்தி தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சரித்திரத்தில் முதல் முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதியின் கைதாக இது பதிவாகியுள்ளது.
தொடர்புடைய செய்தி : இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதானார்!
நீதிமன்றத்தில் பாதுகாப்பு
கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது நீதிமன்றத்தைச் சுற்றிப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அங்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மற்றும் முன்னாள் ஆட்சியாளர்கள் பலர் ஒன்றுகூடினர்.
ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கிய போது அதிலிருந்து நாட்டை மீட்டு எடுத்தவர் ரணில் எனப் பலர் அங்கு கோஷமிட்டனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர்.
இருவரும் நோயாளிகள் என்றார் சட்டத்தரணி
முன்னாள் ஜனாதிபதி இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளார் என ரணில் விக்கிரமசிங்கவின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரைப் பராமரிக்க கணவர் மட்டுமே உள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனது கட்சிக்காரரின் பிணை மனுவை பரிசீலிக்கும்போது, இந்த சூழ்நிலைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறு அவர் நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.
பிணை கோரிக்கை உத்தரவு ஒத்திவைப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிணைக் கோரிக்கை தொடர்பான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டது.
இதன்படி, அரை மணித்தியாலயத்திற்கு குறித்த உத்தரவு தொடர்பான அறிவிப்பை ஒத்திவைப்பதாக கொழும்பு கோட்டை நீதிமன்றம் அறிவித்தது.
மின்சாரம் துண்டிப்பு
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட நீதிமன்ற அறை வளாகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல மணி நேரத்தின் பின்னரே நிலைமை வழமைக்குக் கொண்டுவரப்பட்டது. மின்சாரம் தடைபட்டதாலேயே, வழக்கில் உத்தரவு வழங்குவது மேலும் தாமதமானது.
