வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஹெலிகொப்டர் இருந்த விமானப்படை வீரர்கள் இருவர் மற்றும் நிவாரணப் பணியாளர்கள் மூவர் என ஐந்து பேர் காயமடைந்தனர்.
பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து கிங் ஓயாவில் வீழ்ந்த ஹெலிகொப்டரில் இருந்தவர்களை உடனடியாக மீட்டு, மாரவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி : நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படை ஹெலிகொப்டர் விபத்து!
எனினும், பிரதான விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
41 வயதான, 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட அனுபவம் வாய்ந்த விமானியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த ஏனையவர்கள் மாரவில வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.