கொரோனா வைரஸ் தடுப்பு வேலைத்திட்டத்திற்காக பெருந்தொகை வெளிநாட்டு நிதியுதவி கிடைத்தும் பில்லியன் கணக்கில் ஏன் பணம் அச்சிடப்படுகிறது என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும் என முன்னாள் கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் S.M மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
வெளிநாட்டு நிதியுதவியாக 12 ஆயிரத்து 743 கோடியே 10 லட்சம் ரூபா கிடைத்துள்ளதாகவும்,அதில் சுய தொழில் மற்றும் அன்றாடம் சம்பளம் பெறும் 42 லட்சம் பேருக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கினாலும் அரசாங்கத்திடம் 10 ஆயிரத்து 643 கோடியே 20 லட்சம் ரூபா இருக்க வேண்டும். மீதமுள்ள இந்த நிதியுதவியின் மூலம் என்ன செய்ய போகின்றது என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
இந்த பணம் சுகாதார உபகரணங்கள், மருந்து, வைத்தியசாலை நிர்மாணம், வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்குதல் உட்பட எதற்கு பயன்படுத்த போகிறது என்பதை அரசாங்கம் கூற வேண்டும்.
இதனிடையே அரசாங்கம் 20 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை அச்சிட்டுள்ளதாகவும் இதன் காரணமாக 182 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 195 ரூபாவாக அதிகரித்தது. அத்துடன் இதன் காரணமாக கடன் சுமையானது வட்டியின்றி 52 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன் அரசாங்கம் மேலும் 10 ஆயிரம் கோடி ரூபா பணத்தை அச்சிட தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
குறிப்பிடத்தக்களவு நிதியுதவி அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள நிலையில், ஏன் பணத்தை அச்சிடுகிறது என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும் என மரிக்கார் கூறியுள்ளார்.
-வணக்கம் லண்டனுக்காக ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-