Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மிர்ச்சி சிவா – யோகி பாபு கூட்டணி வெற்றியை தருமா

மிர்ச்சி சிவா – யோகி பாபு கூட்டணி வெற்றியை தருமா

1 minutes read

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகர்களின் பட்டியலில் இணைவதற்காக ‘தனி வழி’யில் போராடிக் கொண்டிருக்கும் நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘காசேதான் கடவுளடா’ திரைப்படம் இம்மாதம் 24 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது.

தயாரிப்பாளர் இயக்குநருமான ஆர் கண்ணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் காசேதான் கடவுளடா இந்த திரைப்படம் இதே பெயரில் 1972 ஆம் ஆண்டில் ஏ பி எம் நிறுவனத்தின் தயாரிப்பில் சித்ராலயா கோபு எழுத்து இயக்கத்தின் வெளியானது.

இதன் மறு உருவாக்க உரிமையை பெற்று தற்போது புதிய வடிவில் காசேதான் கடவுளடா தயாராகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் யோகி பாபு, கருணாகரன், புகழ், மனோபாலா, டிடிவி கணேஷ், தலைவாசல் விஜய், ஊர்வசி, சிவாங்கி, கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார். மசாலா பிக்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆர். கண்ணன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது இதன்போது பட குழுவினர் பங்கு பற்றினர். இயக்குநர் ஆர். கண்ணன் பேசுகையில்,

“எனது இயக்கத்தில் கடந்த ஆண்டு கடந்த மாதம் தி கிரேட் இந்தியன் கிச்சன் என்னும் திரைப்படம் வெளியானது இந்த மாதம் காசேதான் கடவுளடா எனும் திரைப்படம் வெளியாகிறது.

ஒரே இயக்குநரின் இரண்டு படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாவது என்பது மிகவும் கடினமான விடயம். இதற்காக ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா காலகட்டத்தில் மிர்ச்சி சிவாவிடம் பேசும்போது அவர்தான் இப்படத்தினை மறு உருவாக்கம் செயலாமா.. என தற்செயலாக கேட்டார்.

எமக்கும் அது சரி என்று பட்டதால் உடனடியாக இது தொடர்பாக ஏவியம் நிறுவனத்தை அணுகி அவர்களிடம் சம்மதம் கேட்டேன். அவர்களும் சம்மதம் தெரிவிக்க படத்தின் பணிகள் தொடங்கியது.

கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு பல தடைகளை சந்தித்து தற்போது வெளியாகவிருக்கிறது. எங்களால் முடிந்தவரை இந்த திரைப்படத்தை ரசிகர்களை சிரிக்க வைப்பதற்காக உருவாக்கி இருக்கிறோம். திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

இதனிடையே தமிழ் திரையுலகில் ரீமேக் இயக்குநர் எனும் அடையாளத்துடன் வலம் வரும் ஜெயம் ராஜாவிற்கு போட்டியாக இயக்குநர் ஆர். கண்ணனும் தொடர்ந்து ரீமேக் திரைப்படங்களை இயக்கி வருகிறார் என்றும், அவரது இயக்கத்தில் ‘கண்டேன் காதலை’, ‘சேட்டை’, ‘தள்ளி போகாதே’, ‘ தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘காசேதான் கடவுளடா’ ஆகிய படங்களை ரீமேக் செய்து, தமிழ் சினிமாவின் புதிய ரீமேக் இயக்குநர் என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கிறார் என்றும் திரையுலகினர் தெரிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More