செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மகுடம் – திரைப்பட விமர்சனம்

மகுடம் – திரைப்பட விமர்சனம்

2 minutes read

தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ்

நடிகர்கள் : விஷால், அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ், அர்ஜெய், வம்சி கிருஷ்ணா, தம்பி ராமையா மற்றும் பலர்.

இயக்கம் : விஷால்

மதிப்பீடு : 2/5

திரையுலகில் அறிமுகமாகி மூன்று தசாப்தங்களை கடந்த பிறகு தன்னுடைய தொடக்க கால கனவான திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவை-  நடிகர் விஷால் நனவாக்கி இருக்கும் ‘மகுடம்’ திரைப்படம் – அவரது இயக்கத்திற்கு ரசிகர்களால் ‘மகுடம் ‘ சூட்டப்பட்டதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

பெற்றோர்களை இழந்து சமூக அவலங்களை பால்ய பிராயத்திலேயே எதிர்கொண்ட லிங்கா( விஷால் ) – வன்முறையை தொடர்ந்து மேற்கொண்டால்தான் வாழ இயலும் என்ற நிலையில், வன்முறையை தன் வாழ்வியல் ஆயுதமாக, வாழ்வாதார ஆயுதமாக பாவிக்கத் தொடங்குகிறான்.

இதனால் சரக்குகளை இறக்கும் துறைமுகம் ஒன்றின் பின்னணியில் இயங்கும் சட்ட விரோத கும்பலில் சேர்கிறான். சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டாலும் அதற்கும் ஒரு எல்லையை நிர்ணயித்துக் கொண்டு செயல்படுகிறான் லிங்கா.

அதில் எந்த காரணத்தை முன்னிட்டும் சாலையில் இயங்கும் துவி மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்களில் போலியானவற்றை இறக்குமதி செய்ய உறுதியாக ‘நோ’ சொல்கிறார். வேறு யாரேனும் அந்த சட்ட விரோத செயலை செய்தாலும் தடுக்கிறார்.

இதனால் அவர் மீதான பகை வெவ்வேறு கோணங்களில் அதிகரிக்கிறது. அத்துடன் துறைமுகத்தின் ஒரு பகுதியில் மீன் விற்பனை செய்யும் அன்னபூரணி ( அஞ்சலி ) என்ற பெண்மீது லிங்காவிற்கு காதல் வருகிறது. லிங்கா-  அன்னபூரணி திருமணம் செய்து கொண்ட பிறகு, அவர்களுக்கு கிருபாகரன் ( விஷால்) என்றொரு மகன் பிறக்கிறான்.

எதிரிகளின் சதி, சூழ்ச்சியால் அன்னபூரணி மரணம் அடைய தன் தந்தை லிங்காவை வெறுக்கத் தொடங்குகிறான் கிருபா.

அத்துடன் அவரை புறக்கணித்து வேறு இடத்திற்குச் சென்று ஜமுனா( துஷாரா விஜயன்) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகளுடன் இனிமையான இல்லற வாழ்க்கையை தொடங்குகிறார்.

பிள்ளைகளின் ஆசை காரணமாக நான்கு சக்கர மகிழுந்து ஒன்றை வாங்க திட்டமிடுகிறார் கிருபாகரன்.

இதற்காக தன்னுடைய பொருளாதார சக்திக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திய பிறகு விற்பனை செய்யப்படும் மகிழுந்து ஒன்றை வாங்குகிறார். அதில் இனிமையாக விடுமுறையைக் கழிக்க மலைவாசஸ்தலத்திற்கு செல்லும்போது எதிரிகளால் அவருடைய மனைவியும், மகளும் மரணம் அடைகிறார்கள்.

இதற்கும் காரணம் தன் தந்தை லிங்காவின் பாதக செயல்தான் என நினைக்க… லிங்காவின் நண்பர் கிருபாகரனை நேரில் சந்தித்து உனது தாய் அன்னபூரணியின் மரணத்திற்கு முன்பான வாக்குமூலத்தை கேள் என சொல்கிறார். அது என்ன வாக்குமூலம் ?அதன் பிறகு கிருபாகரன் தந்தை மீதான வெறுப்பை கைவிட்டாரா? இல்லையா? தந்தையை சந்தித்தாரா? இல்லையா? போலியான வாகன உதிரி பாகங்கள் இறக்குமதியானதா? இல்லையா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

முதல் பாதியில் கிருபாகரன், ஜமுனா, தம்பி ராமையா தொடர்பான காட்சிகள் யதார்த்தமானதாக இருந்தாலும், திரையில் சுவராசியமாக அறிமுக இயக்குநர் விஷால் சொல்லாததால் ரசிகர்களுக்கு சோர்வு ஏற்படுகிறது.

அதிலும் திரைக்கதையை ரசிகர்களின் எளிதான யூகத்திற்கு ஏற்ப நகர்வதால் எரிச்சலும் அதிகரிக்கிறது. இரண்டாம் பாதியில் லிங்காவின் கதாபாத்திரத்தில் சில அம்சங்கள் நன்றாக இருந்தும்.. அதை திரையில் அழுத்தமான காட்சிகளாக விவரிக்காமல் மேலோட்டமாக கடந்து சென்றிருக்கிறார் இயக்குநர்.

‘இதுவரை எந்தத் திரைப்படத்திலும் வராத எட்டு நிமிட உச்சகட்ட காட்சி’ என வெளியீட்டிற்கு முன்பாக படத்தை பற்றிய எதிர்பார்ப்பை இயக்குநரும், நடிகருமான விஷால் சொல்லியதால் எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால் எதிர்பார்ப்பு புஸ்ஸானது. மக்கள் அதிலும் மீனவ பெண்மணிகள் கையில் ஆயுதம் ஏந்தி வன்முறையாளர்களை வன்முறையால் எதிர்கொள்ளும் காட்சி…?

லிங்கா, கிருபாகரன் என இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் விஷால் நடித்திருந்தாலும் கிருபாகரன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்கிறான்.

ஜமுனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் துஷாரா விஜயனை விட, அன்னபூரணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஞ்சலியின் நடிப்பும், திரை பங்களிப்பும் சிறப்பு. அஞ்சலி குண்டாகி விட்டாலும்.. குத்தாட்டம் ஆடி, ரசிகர்களை கவர்கிறார்.

ஆக்ஷன் காட்சிகள் அதிரடி என்றாலும் அனைத்தும் அநியாயத்திற்கு நீளம்… அதுவே திகட்ட வைக்கிறது.

ஜீ. வி. பிரகாஷ் குமாரின் இசையில் ‘கலங்காதே’ பாடல் நன்றாக இருக்கிறது. பின்னணிசையிலும் தான் ஒரு தேசிய விருது பெற்ற மகா கலைஞன் என்பதை நிரூபிக்கிறார். இசைஞானியின் பாடல்களை திரைக்கதையிலும் … உச்சகட்ட காட்சியிலும்… பயன்படுத்தி இருப்பது ரசிகர்களை ஈர்க்கும் ஒரு முயற்சி.

ரிச்சர்ட் எம். நாதன்-  அபிநந்தன் ராமானுஜம் ஆகிய இருவரது ஒளிப்பதிவும் கண்களுக்கு குளிர்ச்சி.

தந்தை வன்முறையாளர் என்றால்… மகனும் வன்முறையாளனாகவே இருக்க வேண்டும் என்பதை விஷால் கஷ்டப்பட்டு சொல்லி இருக்கிறார். இதை இஷ்டப்பட்டு ரசிக்கும்படி சொல்லி இருந்தால்….! ரசித்திருக்கலாம்.

மகுடம் – காகித கிரீடம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.